Author: கிருபாநந்தினி
•Sunday, January 03, 2010
பெங்களூர் போயிருந்த கதையில கொஞ்சம் அவுத்து வுடறேன்! (அதென்னமோ, இங்கே எல்லா பத்திரிகையிலயும் பெங்களூரு, பெங்களூருன்னே போடறாங்க. எனக்குத் தெரிஞ்ச வரையில அங்க அது மாதிரி ஒண்ணும் காணோம்! பெங்களூருன்னு மாத்தணும்னு ஒரு யோசனை இருக்கு. இன்னும் அது நடைமுறைக்கு வரலைங்கிறதுதான் உண்மை!)

அங்கே கே.ஆர்.புரத்துல (கிருஷ்ணராஜபுரம்) எங்கம்மாவோட சித்தப்பா மகளுடைய... வேணாம், உறவு முறையை விவரிச்சா ரெம்ம்ம்ப குழம்பிடுவீங்க. அதனால டைரக்டா மேட்டருக்கு வரேன்.

அங்கே லாவண்யா ராம்குமார்ங்கிற எங்க உறவுக்காரங்க வீட்டுக்குப் போயிருந்தேன். லாவண்யா எனக்கு அக்கா முறை. அங்கே ரெண்டு நாள் தங்கினேன். அன்பா பார்த்துக்கிட்டா. கிளம்பி வர்றப்ப ஏகப்பட்ட டப்பர்வேர் சாமான்களை கிஃப்ட்டா மூட்டை கட்டிக் கொடுத்தனுப்பினா.


நாங்க அவ வீட்டுக்குப் போயிருந்தன்னிக்கு ஒரு தமாஷ்! வீட்டுல அவ மட்டும்தான் இருந்தா. வேற ஒருத்தரையும் காணோம். “எங்கேடி உங்க வீட்டுக்காரரு, பசங்க எல்லாம்?”னு கேட்டேன். அவளுக்கு ஒரு பையன்; ஒரு பொண்ணு. பையன் காலேஜ் படிக்கிறான். பொண்ணு டென்த். அவ வீட்டுக்காரரு பல் டாக்டரா இருக்காரு. சொந்தமா கிளினிக் வெச்சிருக்காரு.

“விக்கிக்கு ரெண்டு நாளா உடம்பு சரியில்லை. நேத்திக்கு டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போய் வந்தாரு. பிளட் டெஸ்ட்டும் இன்னும் வேற ஏதோ சில டெஸ்ட்டுகளும் எடுக்கணும்னு சொன்னாங்களாம். எடுத்திருக்காங்க. ரிசல்ட் இன்னிக்குக் கிடைக்குமாம். மறுபடி செக்கப்புக்குக் கூட்டி வரச் சொன்னாங்க. அதான், ரெண்டு பேரும் போயிருக்காங்க”ன்னா.


“அடடா! என்ன உடம்புக்கு?”ன்னு பதற்றத்தோட கேட்டாரு கிருபா.

“வாயக் கட்டினாதானே! கண்டதையும் திங்க வேண்டியது. உடம்புக்கு வராம என்ன செய்யும்? எல்லாம் எங்க வீட்டுக்காரரு கொடுக்குற எடம். தினம் தினம் எத்தையாவது வாங்கி வந்து தரவேண்டியது. பேக்கட் ஃபுட்ஸே உடம்புக்கு அத்தனை நல்லதில்லை. சொன்னா கேட்டாத்தானே?”ன்னா.

“வயித்து வலியா? டைஜஷன் பிராப்ளமா?”னு கேட்டேன்.


“தெரியலை. ரெண்டு நாளா சரியா எதுவும் சாப்பிட மாட்டேங்கிறான். துறுதுறுன்னு இருப்பான். அங்கே ஓடுவான், இங்கே ஓடுவான், குதிப்பான்... ஒரு இடத்துல நிக்க மாட்டான். சரியான வாலு. ரெண்டு நாளா எந்த ஆர்ப்பாட்டமும் பண்ணாம அமைதியா இருந்தான். ரூமை விட்டு வெளியே வரவே இல்லை. என்ன ஆச்சோ பயலுக்குன்னு பதறிப் போயிட்டோம். டாக்டர்கிட்ட போகலாம், வாடான்னா வரமாட்டான். இழுத்துட்டுப் போங்க, அவன் கிடக்கிறான்னேன். ஏற்கெனவே ஒரு தடவை இந்த மாதிரி அவனுக்கு உடம்பு சரியில்லாம இருந்தப்போ ஒரு டாக்டர்கிட்ட அழைச்சுக்கிட்டுப் போனோம். அப்ப எங்கே போறோம்னு இவனுக்குத் தெரியலே. பேசாம எங்க கூட வந்துட்டான். அங்கே அந்த டாக்டர் இவனுக்கு ஒரு ஊசி போட்டாரு. பெரிய ஊசி. மருந்து ஹெவி டோஸா இருந்திருக்கும்போல. வலி தாளாம கத்தினான். ரெண்டு நாளா காலை அசைக்கமுடியாம கிடந்தான். வெந்நீர் ஒத்தடம் கொடுத்தேன். அதுலேர்ந்து டாக்டர்னாலே அலர்ஜி! வரமாட்டான். படுத்துவான். ஹூம்... இவனை வெச்சுக்கிட்டு நான் படுற பாடு...”

“விக்கியோட முழுப் பேர் என்ன?”

“விக்ரம். கெட்டிக்காரன். படு புத்திசாலி. கற்பூர புத்தி”ன்னா லாவண்யா, பெருமையா. இருக்காதா பின்னே? நல்லாப் படிக்கிற பையனா இருந்தா, தன் பையன் புத்திசாலிங்கிற பெருமை எந்த அம்மாவுக்கும் இருக்கும்தானே? ‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்’னு வள்ளுவரே சொல்லியிருக்காரே!

“இப்போ என்ன வயசாகுது விக்ரமுக்கு?”ன்னு கேட்டார் கிருபா.

“வர்ற தையோட பதினெட்டு முடிஞ்சு பத்தொம்பது ஆரம்பமாகப் போகுது!”ன்னா. தொடர்ந்து...

“நாலு நாள் முன்னாடி எங்க மாமாவும் மாமா பசங்களும் வந்திருந்தாங்க. எல்லாம் கல்யாணத்துக்கு வந்திருந்த கோஷ்டிங்கதான். இவனுக்கு அவங்களைப் பார்த்ததும் உற்சாகம் தாங்கலே. சும்மாவே கேட்கவேணாம்... குரங்குத்தன சேஷ்டையெல்லாம் பண்ணுவான். அவங்க வந்ததும் சந்தோஷத்துல ரொம்ப எக்ஸைட் ஆகி, ஓவர் ரியாக்ட் பண்ணதுல மயங்கி விழுந்துட்டான். பதறிப் போய் ஈரத் துணியால மூஞ்சைத் துடைச்சு எழுப்பினோம். டாக்டர்கிட்டே உடனே அழைச்சுட்டுப் போனாரு. என்ன உடம்பு, என்னன்னு புரியலை. அவரு ஒரு ஊசி போட்டு அனுப்பிட்டாரு. அதுக்கப்புறம் முந்தாநாள் எல்லாம் நல்லாதான் இருந்தான். நேத்திக்கு வேற ஒரு ரிலேஷன் வந்திருந்தாங்க. யாருன்னு உனக்குச் சொன்னா புரியாது. இவனுக்கு அவங்களோட பையன் கீர்த்தியை ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி அவன் இங்கே வந்திருக்கான். அவனோட சேர்ந்து இவன் ஒரே ஆட்டம். மறுபடியும் எக்ஸைட் ஆகி, மயக்கம் போட்டு விழுந்தான். பிபி இருக்குமா, என்னன்னே புரியலை. ஒரே கவலையா இருக்கு. வந்தாதான் தெரியும். வர நேரம்தான்” என்றாள்.

“என்னடி உளர்றே! பதினெட்டு வயசுப் பிள்ளைக்கு பிபியாவது, ஒண்ணாவது! அதெல்லாம் ஒண்ணும் இருக்காது! கவலைப்படாதே!”ன்னு அவளுக்கு ஆறுதல் சொன்னேன்.

கொஞ்ச நேரத்தில், வேறு ஃப்ளாட்டுக்கு சிநேகிதிகளோடு விளையாடப் போயிருந்த பொண்ணு திவ்யா வந்தா. எப்படிப் படிக்கிறே, எக்ஸாம்லாம் முடிஞ்சுடுத்தான்னு பிளேடு போடாம, கடைசியா என்ன சினிமா பார்த்தே, நான் விஜய் ஃபேன், நீ யாரோட ஃபேன்னு ஜாலியா பேசவும், அவ என்னோடு ஒட்டிக்கிட்டா. என் குழந்தையைத் தூக்கிக்கிட்டு ஓடினா. ‘பார்த்துடீ... பார்த்துடீ... கீழே போட்டுடப் போறே!’ன்னு பதறினா லாவண்யா.

சாயந்திரம் மூணு மணிக்கு வாசல்ல நாய் ஒண்ணு பலமா குரைக்கிற சத்தம். “அவருதான்... வந்துட்டாரு போலிருக்கே!”ன்னா லாவண்யா. எனக்கு ஒண்ணும் புரியலை.

எழுந்து போய்க் கதவைத் திறந்தா. மெயின் கேட்டைத் திறந்துகிட்டு ராம்குமார்தான், கையில பெரிய அல்சேஷன் நாய் ஒண்ணைப் பிடிச்சுக்கிட்டு உள்ள வர்றாரு. ஆஜானுபாகுவா இருந்த அதன் சைஸைப் பார்த்ததும் எனக்குக் கை காலெல்லாம் உதறல் கண்டுடுச்சு. நான் பம்மிப் பதுங்குறதைப் பார்த்துட்டு, “பயப்படாதே நந்தினி! அவன் ஒண்ணும் பண்ண மாட்டான். ரொம்ப சாது! வேண்டியவங்க யாரு, வேண்டாதவங்க யாருன்னு அவனுக்கு நல்லாவே தெரியும்! நீங்க என்கூட இருக்கிறதை வெச்சே, வேண்டியவங்கதான்னு புரிஞ்சுப்பான். ரொம்பக் கெட்டிக்காரன்”னா லாவண்யா சிரிச்சுக்கிட்டே.

“டேய் விக்கி! என்னடா, ஊசி போட்டுக்கிட்டியா? ரொம்ப வலிச்சுதாடா என் செல்லத்துக்கு?”ன்னு அதன் தலையை வருடிக் கொடுத்தா.

‘விக்கியா? அப்ப உடம்பு சரியில்லேன்னு இவ இத்தனை நேரம் விலாவாரியா விவரிச்சதெல்லாம் இந்த நாயைத்தானா!’ன்னு தலை சுத்துச்சு எனக்கு.

“என்னடி, இந்த நாயைத்தான் இத்தனை நேரம் விக்கி, விக்கின்னியா? அப்போ விக்கிங்கிறது உன் பையன் இல்லியா?”ன்னு கேட்டேன்.

“சீ..! வாயைக் கழுவு. நாய்னு சொல்லாதடீ! அப்படிச் சொன்னா ராமுக்கு பயங்கர கோபம் வந்துடும். இவனும் எங்க குடும்ப உறுப்பினர்கள்ல ஒருத்தன்தான்! எவ்ளோ கெட்டிக்காரன் தெரியுமா? இவன் ஒருத்தன்தான் இந்த காம்பௌண்ட்ல இருக்கிற எல்லா வீட்டுக்கும் பாதுகாப்பு. ரெண்டு வருஷத்துக்கு முன்னே என்ன ஆச்சுன்னா...”ன்னு விக்கியின் அருமை பெருமைகளை விவரிக்கத் தொடங்கினா.

“அதெல்லாம் இருக்கட்டும்டீ! உன் மகன் பேர் என்ன?”ன்னு குறுக்கிட்டுக் கேட்டேன்.

“பிரசன்னா”ன்னா.

“அவனை எங்கே காணோம்?”னு மறுபடி கேட்டேன்.

அதுக்கு லாவண்யா சொன்ன பதில் என்னைத் தூக்கிவாரிப் போட வெச்சுது.

“அந்த நாய் எங்கே ஊரைச் சுத்தப் போயிருக்கோ, யாருக்குத் தெரியும்?” .
.
|
This entry was posted on Sunday, January 03, 2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

26 comments:

On Jan 3, 2010, 9:44:00 PM , பின்னோக்கி said...

நீங்கள் விளையாட்டாக சொன்னாலும் நாய் வளர்ப்பவர்களுக்கு, அதை நாய் என்று சொன்னால் பொறுக்காது. கடைசி வரை சஸ்பென்ஸை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருந்தது.

 
On Jan 3, 2010, 10:43:00 PM , கிருபாநந்தினி said...

ஹாய்! எப்படி பின்னோக்கி, உடனே உடனே படிச்சு கமெண்ட் போட்டுர்றீங்க? ட்வெண்ட்டி ஃபோர் அவர்ஸும் நெட்லயே இருப்பீங்களோ? Thanks a lot for your immediate response! :)

 
On Jan 3, 2010, 11:40:00 PM , creativemani said...

ஸ்டார்டிங் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் பினிஷிங் சூப்பரு..

 
On Jan 4, 2010, 1:47:00 AM , பொன்னியின் செல்வன் said...

ரொம்ப நல்ல பதிவு கிருபாநந்தினி அவர்களே! மிக சுவாரசியமாக இருந்தது! வாழ்த்துக்கள்!

 
On Jan 4, 2010, 2:16:00 AM , SenthilMohan K Appaji said...

ஹ்...ம்ம்.. அங்க கொண்டுபோய் வெச்சிருகீங்க ட்விஸ்ட்ட.. !!

 
On Jan 4, 2010, 3:21:00 AM , K.MURALI said...

//“அந்த நாய் எங்கே ஊரைச் சுத்தப் போயிருக்கோ, யாருக்குத் தெரியும்?” //
பல இடங்களில் நடப்பதுதான்.
கடைசி வரை இப்படிப்பட்ட முடிவை எதிர்பார்க்கவில்லை.

 
On Jan 4, 2010, 7:37:00 AM , லதானந்த் said...

http://lathananthpakkam.blogspot.com/2008/06/blog-post.html

http://lathananthpakkam.blogspot.com/2009/07/blog-post_18.html

 
On Jan 4, 2010, 7:38:00 AM , லதானந்த் said...

http://lathananthpakkam.blogspot.com/2008/06/blog-post.html

http://lathananthpakkam.blogspot.com/2009/07/blog-post_18.html

 
On Jan 4, 2010, 8:37:00 AM , Mottai said...

Very nice twist. Excellent. Made me laugh.

 
On Jan 4, 2010, 10:11:00 AM , sathishsangkavi.blogspot.com said...

பெங்களூர்ய நல்ல அனுபவிச்சு இருப்பீங்க போல.......

 
On Jan 4, 2010, 11:33:00 AM , ஆதி மனிதன் said...

//நீங்கள் விளையாட்டாக சொன்னாலும் நாய் வளர்ப்பவர்களுக்கு, அதை நாய் என்று சொன்னால் பொறுக்காது.//

சரியா சொன்னீங்க பின்னோக்கி.

//“அந்த நாய் எங்கே ஊரைச் சுத்தப் போயிருக்கோ, யாருக்குத் தெரியும்?”//

அக்கா. சூப்பர். அதிலும் கடைசி வரி செம நக்கல். நிஜமாவே களுக்கென்று நான் சிரித்துவிட்டேன். அருகிலிருந்தவர் ஒரு மாதிரியா பார்க்குமளவுக்கு.

http://aathimanithan.blogspot.com/2009/12/blog-post_23.html நீங்க இந்த பதிவ படிச்சீங்களான்னு தெரியாது. படிக்கதான் ஒரு மாதிரி இருக்கும் ஆனா புடிச்சிருந்தா படிச்சிட்டு உங்க comment போடுங்க. நன்றி.

 
On Jan 4, 2010, 4:45:00 PM , Raja said...

Very gud one..i liked the last line...but felt bad how the people have changed...

 
On Jan 4, 2010, 9:46:00 PM , Lavanya said...

Dear Nandhini, I read and enjoyed your article about your visit to my house. A small correction. Vikki is not the breed of alsation but it is a doberman. And, the last line in your article is okay to maintain the suspense and increase the humor value but I wish to bring to your kind notice that the particular line was uttered by me in a jolly mood. I have written this letter with fear, whether the readers of this article had misunderstood that we give importance and love more to Vikki than our children. And one more sad information for you... Vikki has expired yesterday!

Yours lovingly,
Lavanya Ramkumar.

 
On Jan 5, 2010, 3:21:00 AM , ப்ரியமுடன் வசந்த் said...

டப்பர்வேர் x சாஃப்ட்வேர்

இதுதானே அர்த்தம் மேடம் ஹ ஹ ஹா...!

நல்லா எழுதியிருக்கீங்க...!

 
On Jan 5, 2010, 8:00:00 AM , கிரி said...

நந்தினி இது கதை மாதிரி இருக்கு(நோ கிண்டல்).... கதை போட்டிக்கு அனுப்பலாம்.

 
On Jan 5, 2010, 11:11:00 AM , sathishsangkavi.blogspot.com said...

Try to See
http://sangkavi.blogspot.com/

 
On Jan 5, 2010, 4:03:00 PM , மகா said...

//அதுக்கு லாவண்யா சொன்ன பதில் என்னைத் தூக்கிவாரிப் போட வெச்சுது.

“அந்த நாய் எங்கே ஊரைச் சுத்தப் போயிருக்கோ, யாருக்குத் தெரியும்?” .//
செம நக்கல்...

 
On Jan 6, 2010, 3:22:00 PM , ஆதி மனிதன் said...

******வலையுலகப் படைப்பாளிகள்! - தினமணி கட்டுரை*******

//சில பெண் படைப்பாளிகள் அரசியல், சமூகச் சிந்தனைகளையும் விதைக்கின்றனர். ஃபஹீமாஜஹான், நளாயினி, புதியமாதவி, தமயந்தி, சாந்தி லட்சுமணன், கலகலப்ரியா, ராமலக்ஷ்மி, ரம்யா, கிருபாநந்தினி, மதுமிதா, தாரணி பிரியா, பெரியார் தமிழச்சி, மாதங்கி, விக்னேஷ்வரி, மழை ஷ்ரேயா போன்ற நூற்றுக்கணக்கானோர் ஆக்கப்பூர்வமான, அபூர்வமான படைப்புகளை பதிவிடுகின்றனர். //

அக்காவுக்கு வாழ்த்துக்கள்.

 
On Jan 16, 2010, 2:00:00 AM , Romeoboy said...

ஹலோ அந்த சைடுல யாரவது இருக்கீங்களா ?? 10 நாளா ஒண்ணுமே எழுதலையே அதான் கேட்டேன். பெங்களூர்ல டேரா போட்டது போல ஆந்திரா சைடு எங்கயாவது போயிடிங்கள?

 
On Jan 17, 2010, 2:25:00 PM , கிருபாநந்தினி said...

@ அன்புடன் மணிகண்டன், அப்படி இப்படி எப்படி இருந்தாலும் படிச்சு, உங்க கருத்தைச் சொல்றீங்க பாருங்க, அது எனக்குப் புடிச்சிருக்கு!

@ ‘கிருபாநந்தினி அவர்களே’வா..? என்னா பொன்னித் தம்பி, நம்ம வயசை ஔவையார் ரேஞ்சுக்குக் கொண்டு போயிட்டீங்க போல?

@ ஹாய் S.M., ட்விஸ்ட்டு வெச்ச இடம் பெஸ்டுன்னு சொல்றீங்க, அப்படித்தானே? :)

@ கே.முரளி, நானும்தான் எதிர்பார்க்கலை!

@ லதானந்த் அங்கிள்ஜி! யூஆர்எல் இணைப்பு கொடுத்திருக்கீங்க. பார்க்க முடியலைஜி, ஸாரி! கோவிச்சுக்காதீங்க.

@ மொட்டை! பாராட்டினதுக்கு தேங்க்ஸ். பேரைப் பார்த்ததும் நீங்க சோ போல எப்பவும் மொட்டை கேஸான்னு பார்க்க உங்க புரொஃபைலுக்குப் போனேன். அங்கே எதுவும் இல்லாம மொட்டையா இருந்துச்சு! :)

@ சங்கவி! என்னத்தங்க அனுபவிக்கிறது! பெங்களூர்ல இருந்தது 15 நாளுக்கும் மேல. சுத்துனது முழுசா 3 நாளு கூட இருக்காது. :(

 
On Jan 17, 2010, 2:30:00 PM , கிருபாநந்தினி said...

@ ஆதிமனிதன்! தினமணி பேப்பர்ல வந்த வரிகளை எடுத்துப் போட்டு எனக்குப் பின்னூட்டம் இட்டிருந்ததுக்கு மொதல்ல்ல தேங்க்ஸ் சொல்லிக்கிறேன். அப்புறம் உங்க பதிவைப் படிச்சு (யம்மா...!) பின்னூட்டமும் போட்டுட்டேன் ஜஸ்ட் நவ்!

 
On Jan 17, 2010, 2:31:00 PM , கிருபாநந்தினி said...

@ நன்றி ராஜா!

 
On Jan 17, 2010, 2:36:00 PM , கிருபாநந்தினி said...

லாவண்யா அக்கா! எனக்குத் தெரியாதா, நீங்க ஜாலியாதான் சொன்னீங்க, உங்க புள்ளைங்க மேல எத்தனைப் பாசம் வெச்சிருக்கீங்கன்னு! ஆனாலும், நீங்க பயப்பட்டதும் சரிதான். போன பின்னூட்டத்துல ராஜான்னு ஒருத்தர் ரொம்ப ஃபீல் பண்ணிட்டார், நெஜமோன்னு நினைச்சு. அது இருக்கட்டும், என்ன இப்படிக் கடைசி வரியில குண்டைத் தூக்கிப் போட்டுட்டீங்க. நல்லாத்தானே இருந்தான்க்கா விக்கி! நான் அங்கே இருந்த ரெண்டு மூணு நாள்ல எங்கூட ரொம்ப ஒட்டிக்கிட்டானே? ரொம்ப ஸாரிக்கா! வேற நாய் வாங்கி வளர்க்கிற ஐடியா உண்டா? இதைப் படிச்சு கமெண்ட் போட்டதுக்கு தேங்க்ஸ்!

 
On Jan 17, 2010, 2:46:00 PM , கிருபாநந்தினி said...

@ பிரியமுடன் வசந்த், பிரியமுடன் என்னவோ எழுதியிருக்கீங்க. தேங்க்ஸ். பட், எனக்குப் புரியலை! :(

@ கிரி! நான் இதைக் கதைப் போட்டிக்கு அனுப்பணும்னா நீங்கதான் ஜட்ஜா இருக்கணும். :)

@ சங்கவி! ஏற்கெனவே பார்த்திருக்கேன். இப்பவும் போய்ப் பார்த்தேன். டெம்ப்ளேட்டை மாத்திட்டீங்களா? முன்னைவிட ரொம்ப நல்லாருக்கு.

@ மகா! ரொம்பத் தேங்க்ஸ்!

@ ஆதிமனிதன்! இதுக்கான தேங்க்ஸை முன்னாடியே சொல்லிட்டேன். இங்கேயும் சொல்றேன். ரொம்ப தேங்க்ஸ், வாழ்த்தினதுக்கு!

 
On Jan 17, 2010, 2:50:00 PM , கிருபாநந்தினி said...

ரோமியோ அண்ணே! இன்னிக்குச் சுறுசுறுப்பா நான் பதிவு எழுதினதுக்குக் காரணம் நீங்கதான். உங்களோட இந்த அக்கறையான விசாரிப்புதான். தேங்க்ஸுங்ணா!

 
On Jan 17, 2010, 9:52:00 PM , Romeoboy said...

\\ரோமியோ அண்ணே//

தேவை இல்லாமல் குப்பிடேனோ ?? :( அண்ணா எல்லாம் கூப்பிட்டு என்னை பெரியவண்ணா ஆக்கிடதிங்க.