Author: கிருபாநந்தினி
•Friday, April 30, 2010
தானந்த் அங்கிள் தன் வலைப்பூவுல, என் பெயரைத் தலைப்புல போட்டு ‘கிருபாநந்தினியும் ரிப் வான் விங்கிளும்’னு ஒரு பதிவே போட்டுருக்காரு. அதுக்கு நன்றி சொல்ல வேணாமா? அதான்... விங்கிளும் அங்கிளும்னு எதுகைமோனையோட ஒரு பதிவு போட்டுட்டேன். அவர் பத்துக் கேள்விகள் கேட்டிருந்தாரு. அதுக்கான பதில்கள்தான் இது.

லதானந்த் அங்கிள் பத்தி எனக்கு அதிகம் தெரியாது. கிருபா எனக்கு பிளாக் பத்தி அறிமுகம் பண்ணி, சுவாரசியமான சில பேரோட பிளாக்குகளைப் பத்திச் சொன்னப்போ, நான் ஆரம்பத்துல படிச்ச சில பிளாக்குகள்ல லதானந்த அங்கிளோட பிளாகும் ஒண்ணு. அவர் மக வயசுதான் இருக்கும் எனக்கு. அந்த உரிமைல அங்கிள்... அங்கிள்னு அவர் பிளாக்ல கமெண்ட் பண்ணிட்டிருந்தேன். அப்புறம் என்னவோ கேள்வி-பதில் போட்டி வெச்சாரு. அதுக்கு நானும் கேள்வி கேட்டிருந்தேன். அதுக்கு அவரு, ‘பிளாக் எழுதாதவங்க கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்றதில்லை’னு ஸ்ட்ரிக்டா சொல்லியிருந்தாரு. வருத்தமாயிடுச்சு எனக்கு. கிருபா கிட்ட சொன்னேன். உடனே பிளாக் ஆரம்பிச்சுக் கொடுத்து, எழுதுன்னு ஊக்குவிச்சாரு.

ஆக, நான் பிளாக் ஆரம்பிச்சு இன்னிய வரைக்கும் எத்தையாச்சும் உளறிக்கொட்டிட்டு இருக்கிறதுக்கான புண்ணியம் அல்லது பாவம் எல்லாம் அங்கிளைத்தான் சேரும். அதனால, எனக்கு வர்ற பாராட்டுகள்லயும் திட்டுகள்லயும் பாதி அவருக்குப் போயிடுறதாத்தான் நான் நெனைச்சுக்கறேன்.

சரி, அவர் கேட்டிருந்த கேள்விகளும் அதுக்கான என்னோட பதில்களும் கீழே:

1. அவசரமாக டாய்லட் போக வேண்டிய தருணத்தில் கழிவறை கிடைக்காமல் திண்டாடியிருக்கிறீர்களா?
கிடையாது. இயற்கை உபாதைகளை ஆம்பிளைங்களாலதான் அடக்க முடியாது. ஒரு விஷயம் சொல்றேன். மன்னர் காலத்துல தூதுவர்களை அனுப்புவாங்க தெரியுமா, அவன் போற குதிரை பொம்பளைக் குதிரையாதான் இருக்கும். ஏன்னா, ஆம்பிளைக் குதிரையா இருந்தா, அங்கங்கே ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம் போறதுக்காக நின்னுடும். பொம்பளைக் குதிரை நிக்காம ஓடிட்டே இருக்கும். இப்ப புரியுதா?

2. யாரைப் பார்த்துப் பொறாமைப் படுகிறீர்கள்?
லதானந்த அங்கிளைப் பாத்துதான்! இந்த வயசுலயும் பாருங்களேன், சின்னப்புள்ள மாதிரி என்னமா ஜாலியா பிளாக் எழுதிட்டிருக்குறாரு!

3. எதிர்பாராமல் கிடைத்த கிளுகிளு அனுபவம் ஏதாவது?

என் கணவர் கிருபாவை நான் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டது பத்தி என் வலைப்பூவுல ஏற்கெனவே எழுதியிருக்கேன். கல்யாணம் நிச்சயமான பிற்பாடு, அதாவது கல்யாணத்துக்கு ரெண்டு மாசம் இருக்கிறப்போ ஒரு நாள் அவர் எங்க வீட்டுக்கு வந்தாரு. கல்யாணத்துக்குப் புடவை எடுத்திருக்கிறதா சொல்லி எங்கப்பா, அம்மா கிட்ட காண்பிச்சாரு. கொஞ்ச நேரம் பேசிட்டிருந்துட்டுக் கிளம்பிப் போனாரு. நானும் அவரை வழியனுப்புறதுக்காகக் கூடவே போனேன். வெளி வராண்டாவுக்குப் போனதும் கிருபா சட்டுனு திரும்பி என்னை இறுக்க அணைச்சுக்கிட்டு ‘ஐ லவ் யூ நந்தினி’ன்னாரு. திடுக்குனு ஆயிருச்சு எனக்கு. உதறி விலகிட்டேன். ‘சாரி... சாரி நந்தினி! ஐ யம் சாரி!’ன்னு அவர் பதறினதை நினைச்சா இப்பவும் சிரிப்பா வருது எனக்கு. அதுக்கப்புறம் கல்யாணம் முடியிற வரைக்கும் அவர் விரல் கூட எம்மேல பட்டதில்லே. எதிர்பாராம கிடைச்ச கிளுகிளு அனுபவம் இதுதான்.

4. நீங்கள் அசடு வழிந்த ஓர் உண்மைச் சம்பவம் சொல்லுங்களேன்?
காலேஜ் படிக்குறப்போ நானும் ப்ரியதர்ஷினிங்கிற என் சிநேகிதியுமா ஒரு ஓட்டலுக்குப் போனோம். சென்னாபட்டூரா ஆர்டர் பண்ணோம். அதுக்கு முன்னே பின்னே நாங்க சென்னாபட்டூரா தின்னதில்லே. முதல்ல ஒரு அகலமான தட்டுல சுண்டல் மாதிரி கொண்டு வந்து வெச்சான் சர்வர். அப்புறம் ரொம்ப நேரமா ஆளையே காணோம். சரி, இதாம் போலிருக்கு சென்னாபட்டூரான்னு நெனைச்சுக்கிட்டு நானும் அவளும் போட்டி போட்டுக்கிட்டு தட்டைக் காலி பண்ணோம். அப்புறமா நிதானமா பூரி மாதிரி கொண்டு வரான். நாங்க சுண்டலைத் தின்னு முடிச்சதைப் பாத்து குபுக்குனு சிரிச்சுட்டான். நான் ரொம்ப அசடு வழிஞ்ச சம்பவம் அது. ப்ரியதர்ஷினி அவன் சிரிச்சது பொறுக்காம வுடு வுடுன்னு செம டோஸ் வுட்டா. மேனேஜர் வந்து சமாதானம் பண்ணும்படியாயிருச்சு!

5. இன்றளவும் உறுத்திக் கொண்டிருக்கும் குற்ற உணர்வு ஏதாவது இருக்கிறதா?

இருக்கு. எட்டாங்கிளாஸ் படிக்கும்போது என் இங்கிலீஷ் புக்கைத் தொலைச்சுட்டேன். அப்பாவுக்குத் தெரிஞ்சா திட்டுவாரேன்னு, என் சிநேகிதி ரம்யாவோட இங்கிலீஷ் புக்கைத் திருடிக்கிட்டுப் போயிட்டேன். மறுநாள், புக் இல்லாம அவ கிளாஸ் டீச்சர் கிட்ட ஸ்கேலால அடி வாங்கினா. எனக்குப் பாவமாயிடுச்சு. அவளோட தொலைஞ்ச புக்கை நானே தேடிக் கண்டுபிடிச்சுக் கொடுத்த மாதிரி அவ கிட்டே திருப்பிக் கொடுத்துட்டேன். அவ வாத்தியார்கிட்ட அடிவாங்கினப்போ பாவமா இருந்துது. அதைவிட, புக்கைக் கண்டுபிடிச்சு(!)க் கொடுத்தப்போ அவ என் கையைப் பிடிச்சுக்கிட்டு ‘தேங்க்ஸ்டி... தேங்க்ஸ்டி...’னு நூறு தேங்க்ஸ் சொன்னாளே, அப்பதான் ரொம்பப் பாவமா இருந்துது. இன்னிய வரைக்கும் என் மனசுல உறுத்திக்கிட்டிருக்குற குற்ற உணர்வு இதுதான்!

6. சினிமாவுக்கு பிளாக்கில் டிக்கட் வாங்கிச் சென்றிருக்கிறீர்களா?
ம்... யார் படத்துக்குன்னு சொன்னா கேலி பண்ண ஆரம்பிச்சுடுவாங்க!

7. நீங்கள் மீறியதிலேயே பெரிய சட்ட மீறல் எது?
இல்லை. அப்படி எதுவும் தெரியலை. ஒரு தடவை ரயில்வே லைனை கிராஸ் பண்ணி கோயமுத்தூர் ஸ்டேஷனுக்குப் போனேன். அப்படி கிராஸ் பண்ணக் கூடாதாமே! அது சட்டப்படி தப்புன்னு பிளாட்பாரத்துல இருந்த பெரியவர் ஒருவர் சொன்னாரு. அது உண்மையா இருந்தா, அதுதான் நான் செஞ்ச பெரிய சட்ட மீறலா இருக்கும்.

8. அனானி கமெண்ட் போட்டிருக்கிறீர்களா? ஆமெனில் யாருக்கு? எப்போது?
யுவகிருஷ்ணாவுக்குப் போட்டிருக்கேன். எதுக்குன்னு ஞாபகம் இல்லே. அவர் போட்டிருந்த பதிவு ஒண்ணு என்னை ரொம்ப உறுத்திச்சு. கடுப்பாகி போட்டேன்.

9. அன்றைய சரோஜாதேவி இன்றைய மஜா மல்லிகா யாருடைய எழுத்து சூப்பர். ஒப்பிடவும்.
நா வரலைப்பா இந்த ஆட்டத்துக்கு!

10. எனது வலைப்பூவில் லிங்க் தரட்டுமா?
தாங்களேன் அங்கிள்! அப்படியாவது நம்ம புகழ் பெருகட்டுமே! என்ன சொல்றீங்க?

.
|
This entry was posted on Friday, April 30, 2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On May 1, 2010, 1:58:00 AM , Rekha raghavan said...

//அவ வாத்தியார்கிட்ட அடிவாங்கினப்போ பாவமா இருந்துது. அதைவிட, புக்கைக் கண்டுபிடிச்சு(!)க் கொடுத்தப்போ அவ என் கையைப் பிடிச்சுக்கிட்டு ‘தேங்க்ஸ்டி... தேங்க்ஸ்டி...’னு நூறு தேங்க்ஸ் சொன்னாளே, அப்பதான் ரொம்பப் பாவமா இருந்துது.//

படித்த எனக்கும் பாவமா இருந்தது. அதை இன்னமும் நினைச்சி வருந்திக்கிட்டு இருக்கீங்களே நீங்க மிகவும் இளகிய மனசுக்காரர்னு தெரிஞ்சிக்கிட்டேன். எல்லா பதில்களும் பிரமாதம். பாராட்டுகள்.

ரேகா ராகவன்.
(சிகாகோவிலிருந்து)

 
On May 1, 2010, 2:58:00 AM , ரவி said...

ஆக, நான் பிளாக் ஆரம்பிச்சு இன்னிய வரைக்கும் எத்தையாச்சும் உளறிக்கொட்டிட்டு இருக்கிறதுக்கான ***********

good that you know this.

 
On May 1, 2010, 10:07:00 AM , கொல்லான் said...

சாமர்த்தியமான, மென்மையான பதில்கள். ரம்யா இதைப் படிப்பாங்களா?
அது சரி, எதுக்கு ஆப்பீசர மரத்துக்கு கீழ அப்படி உக்கார வெச்சிருக்கீங்க?

 
On May 1, 2010, 2:21:00 PM , பத்மநாபன் said...

எதார்த்தமான பதில்கள் .... யார் படத்துக்குன்னு தெரிஞ்ச்சு போச்சு .. அதுவும் இப்ப வெளிய சொன்னா ... தமாஷா இருக்கும் ..

 
On May 2, 2010, 11:02:00 PM , Madumitha said...

நல்லாஇருக்கு.

 
On May 4, 2010, 7:49:00 PM , வால்பையன் said...

ய்தார்த்தமான பதில்கள்!