•Tuesday, March 30, 2010

ஜூனியர் விகடன்ல படிச்சதுதான் படிச்சேனே, மகா பாவி அதை அத்தோட விட்டுட்டு என் வழியைப் பார்த்துக்கிட்டுப் போயிருக்கக்கூடாதா! அங்கேதான் ரெண்டாவது தப்பைப் பண்ணிட்டேன். இன்னாவோ உலகத்திலேயே ரொம்ப அழகான பொண்ணுன்னு தன்னைச் சொல்லிக்குதே அந்தப் பொண்ணுன்னு, அதன் வலைப்பூவைத் தேடிப் போய்ப் படிச்சேன். உவ்வ்வ்வேய்ய்ய்க்க்க்க்! அப்ப ஆரமிச்ச வாந்தி எனக்கு இன்னும் நிக்கவேயில்லீங்க! தொடர்ந்து ஒரே உமட்டல், குமட்டல்தான்! அதான், பதிவு போடுறதுக்கு இம்புட்டு நாளாயிருச்சு.
ஏன் இப்படியெல்லாம் ஆபாசமா எழுதுதுன்னு கேட்டதுக்கு அந்தம்மா சொல்லுது, பாலியல் அத்துமீறல்களைப் பத்திக் குரல் கொடுக்குதாமா! பெண்ணிய வேதனைகளைப் பிரதிபலிக்குற அதன் எழுத்துக்கள் இதே வீச்சத்தோடுதான்... ஸாரி, வீச்சோடுதான் தொடருமாமா!
இது எப்படித் தெரியுமா இருக்குது... சில வருஷத்துக்கு முன்னால, கோயமுத்தூரு ரயில்வே ஸ்டேஷன் பக்கம் ஒரு பாவப்பட்ட, பைத்தியக்காரப் பொம்பளை திரிஞ்சுக்கிட்டிருந்துச்சு. ஒடம்புல ஒட்டுத் துணி இருக்காது. ‘வாடா, வா! எத்தினி பேரு வேணாலும் வாங்கடா! இந்தாடா என் ஒடம்பு. இதானே ஓணும் உங்களுக்கு. எடுத்துக்குங்கடா!’ன்னு மானாவாரிக்கு ஆபாசமா கத்தும். யாராச்சும் பொம்பளைங்க பாத்து, அதை மறைவுக்கு இட்டுக்கினு போய், நைட்டி ஒண்ணை மாட்டி வுட்டு அனுப்புவாங்க. ரெண்டு நாள்தான் அந்த நைட்டி அதும் ஒடம்புல இருக்கும். மூணாம் நாள் மறுபடி பிறந்தமேனிக்கா திரிஞ்சிட்டிருக்கும். பாவம் அந்தப் பொம்பளை! சொல்லவே கஷ்டமா இருக்குது. எவனோ கசுமால நாயிங்க அதைக் கெடுத்துப்பிட்டிருக்காங்க. மூளைக் கோளாறாயிருச்சு. அதனால, தான் என்ன பண்றோம்னு தெரியாம, மாட்டி வுடற டிரஸ்ஸைக்கூடக் கழட்டிக் கழட்டிப் போட்டுடும்.
மனச் சிதைவுக்கு ஆளாயிட்ட அந்தப் பாவப்பட்ட பொம்பளைக்கும், இந்தப் பாட்டு எழுதுற பொம்பளைக்கும் எனக்கு அதிக வித்தியாசம் தெரியலே. ஒரே ஒரு வித்தியாசம்தான். தான் இன்னது செய்யறோம்னு தெரியாம செய்யுது அது; இது வீம்புக்குன்னே செய்யுது.
பெண் உறுப்புகளைக் கவிதையில எழுதுறதை நியாயமாக்கி வாதாடுறவங்க ஆ, ஊன்னா ஆண்டாள் கவிதையையும், கந்த சஷ்டி கவசத்தையும், இன்னும் சில பக்தி இலக்கியங்களையும் துணைக்கு இழுத்துக்கிறாங்க. அதுல எல்லாம் பெண் உறுப்புகள் பேர் சொல்லப்படலையான்னு கேக்குறாங்க. இவங்களே வேற ஒரு சந்தர்ப்பத்துல, பக்தி இலக்கியங்களைத் தாக்கணும்னு வரப்போ, ஆ... ஆபாசக் குப்பைன்னு அதையே உதாரணம் காட்டுவாங்க.
ஒண்ணு சொல்றேன். அந்தப் பாடல்கள் எழுதப்பட்ட காலம் வேற. அந்தக் காலத்துல அந்த வார்த்தைகளை ஆபாச வார்த்தைகளா யாரும் எடுத்துக்கலே. இன்னிக்கு நல்ல நல்ல வார்த்தைங்களே ஆபாச வார்த்தைகளாயிருச்சே! பஜனைங்கிறது படு ஆபாசமான வார்த்தை ஆயிருச்சு. இன்னிக்குக் குமுதம் பக்தி ஸ்பெஷல் பார்த்துக்கிற ப்ரியா கல்யாணராமன் பல வருஷங்களுக்கு முன்னால குமுதத்துல அந்த ‘பஜனை’ங்கிற வார்த்தையை ஒரு சிறுகதையில படு ஆபாசமான முறையில பயன்படுத்தியிருப்பாரு. மெதுவடை, கீரைவடைங்கிற வார்த்தைகளையெல்லாம் ஆபாச வார்த்தைகளா சினிமாவுல பயன்படுத்த ஆரம்பிச்சுப் பல வருஷமாச்சு.
‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்’னு திருவள்ளுவர் சொல்றாரு. அதுக்காக, அவர் சொல்ற அந்த வார்த்தையையும், இந்த ‘ஒலக அழகி’ தன் கவிதை(?!)யில சொல்ற அதே வார்த்தையையும் ஒரே தராசுல நிறுத்துப் பார்க்க முடியுமா என்ன?
ஜூனியர் விகடன்ல இந்தம்மா கவிதை பத்தி வேலை மெனக்கிட்டு ஏழெட்டுப் பேர் கிட்ட கருத்து கேட்டுப் போட்டிருக்காங்க. ரொம்ப முக்கியம் பாருங்க!
சில பேரோட கருத்துங்களைப் பார்ப்போம்.
சாகித்திய அகாதமி விருது வாங்கினவராம் நீல பத்மனாபன். போலீஸ் அதிகாரிகளுக்கு இலக்கிய ஆராய்ச்சி நடத்துவதற்கான அனுபவமோ நேரமோ இருக்குமான்னு இவருக்குச் சந்தேகமாம். அதனால இதைச் சட்டரீதியா அணுகக் கூடாதுங்களாம். எனக்குப் புரியலீங்க. ஏங்க... போலீஸ்காரங்கன்னா முட்டாளுங்களா என்ன? காவல்துறை அதிகாரிகள்ல எத்தனை எத்தனை பேர் நல்ல இலக்கிய அறிவோட இருந்திருக்காங்க! அதுவுமில்லாம இந்தம்மா எழுதின குப்பையை இலக்கியம்னு தலையில தூக்கிட்டு வராரே இவரு, கஷ்டம்டா சாமி! இதைச் சட்ட ரீதியா அணுகக்கூடாதுன்னா, நாளைக்கு நித்தி சாமியாரும், “நான் பண்றது யோகம். அன்னிக்கு வீடியோவுலயும் அந்த நடிகையோடு யோக ஆராய்ச்சிதான் நடத்திக்கிட்டிருந்தேன். அதைப் புரிஞ்சுக்கிறதுக்கான அனுபவம் போலீஸ் அதிகாரிங்களுக்கு இருக்குமான்னு சந்தேகம்”னு சொல்வாரு. ஒத்துக்குவீங்களா?
அடுத்தாப்ல சாரு நிவேதிதா. இவரைப் பதிவுலகத்திலயும் பத்திரிகையுலகத்திலயும் ரொம்பப் பேரு காமெடியனாத்தான் பாக்குறாங்க. இவரு வாயைப் புடுங்கி எதுனா விவகாரம் கெளப்பலாமான்னு ஆசைப்பட்டிருக்கு ஜூனியர் விகடன். நித்தி சாமியார் விவகாரத்துல இவர் அடிச்ச பல்டி, அந்த வீடியோவைவிட சூப்பரு! இவர் சொல்றாரு, பாலியல், அந்தரங்கம் குறித்த படைப்புகளை ஓர் ஆண் எழுதியிருந்தா இந்த அளவு பிரச்னையாகி இருக்காதாம். ஏங்க... பாய்ஸ் படத்துல எழுதின ஆபாச வசனத்துக்காக எழுத்தாளர் சுஜாதாவைத் தொரத்தித் தொரத்தி அடிச்சாங்களே, மறந்துட்டீங்களா? ஆபாசத்துக்கு எதிரானவங்க சினிமாவையும் சின்னத் திரையையும் விட்டுட்டு எழுத்தாளர்கள் மேல பாயுறது எந்த விதத்துல நியாயம்னு கேக்குறாரு சாரு. யாருங்க விட்டது? யாரும் விடலீங்க. அப்பப்போ எதிர்ப்பு தெரிவிச்சுக்கிட்டுதான் இருக்காங்க. சொல்லப்போனா, ஆ, ஊன்னா சாணி வாளியைத் தூக்கிட்டு ஆபாச சினிமா போஸ்டர்கள் மேல ஊத்தக் கெளம்பிடற, நியூ படம் எடுத்ததுக்காக டைரக்டர் எஸ்.ஜே.சூர்யாவை ஒரு காட்டுக் காட்டின மகளிர் அமைப்புங்க, இந்தம்மா எழுத்தைக் கண்டும் காணாம இருக்குங்கிறதுதான் உண்மை.
‘எழுதுவதற்குச் சுதந்திரம் இருக்குங்கிறதுக்காக எதையும் எழுதிக் குவிக்கலாம் என்பது சரியா? சமூகத்தின்மீது நமக்கு இருக்கும் பொறுப்போடு நாகரிகத்துடன் நம் படைப்புகளைக் கொண்டு போய்ச் சேர்ப்பதுதான் நியாயம்’னு சொல்லியிருக்கும் டைரக்டர் மதுமிதா, ‘சமூகத்தில் விபசாரம் செய்வோர் உருவாக இலக்கியங்கள் காரணமாகும் நிலை வந்தால், அந்தச் சமூகம் உருப்படுமா?’ன்னு பொட்டில் அடித்தாற்போல் கேட்டிருக்குற பிரான்ஸ் வலைப்பதிவாளர் தமிழச்சி, ‘எழுத்துக்கும் தணிக்கை ஏற்படுத்த வேண்டும் என்கிற போராட்டங்களுக்கான காரண கர்த்தாக்களில் ....வும் இருப்பார்’னு நறுக்குனு சொல்லியிருக்கிற வழக்கறிஞர் திலகவதி மூணு பேருக்கும் என் சாஷ்டாங்க நமஸ்காரங்களைத் தெரிவிச்சுக்கிறேன்.
முன்னேயே ஒருமுறை நான் சொன்னதுதான்... மறுபடியும் சொல்றேன். பெண்ணுரிமை, பெண் சுதந்திரம்னு உசுப்பேத்தி உசுப்பேத்தி சில ஆம்பிளைங்க பெண்களைத் தங்கள் வழிக்குக் கொண்டு வந்து எக்ஸ்ப்ளாய்ட் பண்ணத் துடிச்சிட்டிருக்காங்க. ரொம்பப் புத்திசாலின்னு தன்னைத் தானே நெனைச்சிட்டிருக்கிற சில பொம்பிளைங்களும் அந்தப் பேச்சுல மயங்கித் தப்பான வழியில போயிடறாங்க.
நித்தி சாமியார் மாதிரியே இன்னொரு தாடிச் சாமியாரும் பல வருஷத்துக்கு முன்னால இப்படித்தான் பேசிப் பேசி பெண்களை வளைச்சுப் போட்டாரு. ஆம்பிளைங்க என்ன தப்பு வேணாலும் செய்யலாமா, நீங்களும் அவங்களுக்குச் சமதையா எத்தனை ஆம்பிளைங்களோடு வேணாலும் தொடர்பு வெச்சுக்குங்க, ஒண்ணும் தப்பில்லேன்னு போதிக்க ஆரம்பிச்சாரு. கல்யாணமான/ கல்யாணமாகாத ஆண்களும் பெண்களும் ஒண்ணாகக் கூடிக் கும்மாளம் அடிக்கக் கூட்டங்களும் ஏற்படுத்தினாரு. அப்புறம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்போலத் தெரிஞ்சதும் உஷாராகி, அந்தக் கூட்டங்களை நிப்பாட்டிட்டாரு.
ஆகவே... என் சகோதரிகளே, சிநேகிதிகளே! பாத்து புத்தியா பொழைச்சுக்குங்க. எல்லா ஆம்பிளைங்களும் அயோக்கியங்க இல்லே; அது போல, எல்லாப் பொம்பிளைங்களும் யோக்கியமும் இல்லே! அவ்வளவுதான், சொல்லிட்டேன்!
.