Author: கிருபாநந்தினி
•Saturday, May 08, 2010
தி, ரதி, ரவி... இன்னும் பலருக்கும் சந்தோஷம் அளிக்கக்கூடிய செய்தி ஒண்ணைக் கடைசியில சொல்றேன்.

ன்னோட ‘சட்டங்களும் தர்மங்களும்’ பதிவைப் படிச்சுட்டுக் கடுமையா திட்டி வந்த கடிதங்கள் அத்தனையையும் நான் பப்ளிஷ் பண்ணிட்டேன். வழக்கம்போல ஆபாச வார்த்தைகளைக் கொட்டி வந்த பின்னூட்டங்கள் நிறைய. அது எதையும் பதிவிடலே!

இதுல எனக்கு ஒரு ஆச்சரியம் என்னன்னா... நான் ஆண்களுக்கு வக்காலத்து வாங்கி எழுதியிருந்த அந்தப் பதிவைப் படிச்சுட்டு என்னை ஆபாசமா திட்டியிருக்கிறதும் ஆண்கள்தான். சொல்லப்போனா ‘வெளியூர்க்காரன்’ போல ஒரு சில பதிவர்களேகூட மகா மோசமா, ஆபாச வார்த்தைகளால என்னை அர்ச்சனை பண்ணியிருந்தாங்க. பெண்களுக்கு வக்காலத்து வாங்க இத்தனை ஆம்பிளை சிங்கங்கள் இருக்கிறதை நினைச்சு எனக்கு ஒரு விதத்துல பெருமையாவும் இருக்கு; சந்தோஷமாவும் இருக்கு.

இங்கே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்க விரும்பறேன். பெண்ணுரிமை, பெண்ணுக்குச் சுதந்திரம் கொடுக்கணும்னு வாயளவில் பேசுற ஆண்கள் யாரும் தங்கள் வீட்டுப் பெண்களுக்கு அந்தச் சுதந்திரத்தைக் கொடுக்க விரும்புறது இல்லே. மத்த பெண்கள் ‘சுதந்திரமா’ இருந்தாதான் அவங்களுக்குச் சந்தோஷம்.

தமிழ்நாட்டுல கவிராஜர்களா உலா வந்துட்டிருக்கிற இரண்டு கவிஞர்களைப் பத்தி நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தைச் சொல்றேன். ஒருத்தரோட பொண்டாட்டியும் நல்ல கவிதாயினிதான். பிரமாதமா கவிதை எழுதக்கூடியவங்கதான். ஆனா, வெளியில பெண்ணைப் போற்றிப் பேசியும், கவிதைகள் எழுதியும், பாரதிக்கு அடுத்த வாரிசா தன்னை நிரூபிச்சுக்க விரும்புற அந்தக் கவிஞர், தன் பெண்டாட்டியோட எழுத்துக்குத் தடா போட்டுட்டாரு. காரணம், அந்தம்மா எழுதினா இவருக்குப் பேரும் புகழும் போயிடுச்சுன்னா என்னா பண்றதுங்கிற கவ்லைதான்! அது மட்டுமில்லே; அந்தம்மா எந்தப் பத்திரிகைக்கும் பேட்டியே கொடுக்கக்கூடாது; கதைகளோ, கவிதைகளோ, கட்டுரைகளோ எழுதித் தரக் கூடாது. அப்படியே பேட்டி கொடுத்தாலும், கதை, கட்டுரை, கவிதை எழுதினாலும், இவரோட அனுமதி வாங்கிட்டுதான் செய்யணும். அதையும் இவர் வாங்கி, வரிக்கு வரி படிச்சுத் திருத்தம் செய்வாரு. அப்புறம்தான் அதை அந்தப் பத்திரிகை வெளியிடணும். பொது நிகழ்ச்சி எதுலயும் அந்தம்மா கலந்துக்கக்கூடாது. இப்படி ஏகப்பட்ட உத்தரவுகளைப் போட்டு, அந்தம்மாவை வீட்டுச் சிறை போல முடக்கி வெச்சுட்டாரு.

இன்னொருத்தர் இருக்காரு. பெண்ணே தெய்வம், பெண்ணைப் போற்றாத நாடு உருப்படாதுன்னெல்லாம் வீரம் கொப்பளிக்கக் கவிதை எழுதுவாரு. அவரு இன்னும் மோசம். முந்தியெல்லாம், வெளியே போகும்போது தன் பெண்டாட்டியை வீட்டுக்குள்ள வெச்சுப் பூட்டிட்டுதான் போவாராம். சாயந்திரம் அவர் திரும்பி வர்ற வரைக்கும் அந்தம்மாவுக்கு வீட்டுச் சிறைதான். இப்பவும் அப்படித்தான் இருக்காருன்னு தெரியலே.

இவங்கெல்லாம்தான் பெண்ணுரிமையைப் பத்தி வாய் கிழியப் பேசுறவங்க. இப்படித்தான் பல பேர் இருக்காங்க.

ஆனா, ஒண்ணு நிச்சயம். பெண் உரிமை, பெண் சுதந்திரம்னு வாயளவுல பேசாம, என்னோட கணவர் கிருபா போல, நிஜமாவே தங்களோட பெண்டாட்டியை அன்பாவும், மகிழ்ச்சியாவும் வெச்சிருக்கிற ஆண்கள் அதிகம்.

கிருபா டெல்லி போய் மூணு மாசத்துக்கு மேல ஆகுது. சாஃப்ட்வேர்ல கில்லாடி அவரு. சைபர் கிரைம் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறதுல அவரோட பங்களிப்பும் உண்டு. சில காரணங்களுக்காக, அவரோட வேலைகளைப் பத்தி அதிகம் விவரிச்சு எழுத முடியாத நிலையில இருக்கேன்.

ஒரு வாரம் முந்தி அவர் கோயமுத்தூர் வந்தார். நான்தான் போன் பண்ணி அவரை உடனே வரச் சொன்னேன்.

எனக்கு ரொம்ப நாளாவே தலைவலி அதிகம் உண்டு. போன மாசம் ஸ்கேன் பண்ணிப் பார்த்தப்போ, மூளையில ஒரு கட்டி இருக்குன்னு தெரிஞ்சுது. (ஆஹா..! இப்பத்தானே புரியுது நீ ஏன் அத்தனை உளறினேன்னு!) உடனே ஆபரேட் பண்ணணும்னாங்க டாக்டருங்க. இதை கிருபாவுக்குத் தெரியப்படுத்தினா, துடிச்சுப் போயிடுவாரேன்னு சொல்லலை. கட்டியைக் கரைக்குறதுக்கு மருந்து, மாத்திரை வாங்கிச் சாப்பிட்டுக்கிட்டிருந்தேன்.

போன வாரம், தலைவலி அதிகமா போயி, மயங்கி விழுற நிலைமை. இனியும் சொல்லாம இருந்தா நல்லாருக்காதுன்னு, அவருக்கு போன் பண்ணேன். உடனே ஓடி வந்தாரு. டாக்டர்கிட்ட காண்பிச்சோம். “நிலைமை சீரியஸா இருக்கு. உடனே ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்ணுங்க”ன்னாரு டாக்டரு.

கிருபாவுக்கு டெல்லி வேலை முடியலை. அதனால, அங்கே அவருக்குத் தற்காலிகமா கொடுத்திருக்கிற குவார்ட்டர்ஸிலேயே போய்த் தங்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். அவரோட அம்மாவும், தங்கச்சியும் எங்களோட வராங்க. குழந்தை புஜ்ஜிம்மாவும் எங்களோடு வருது.

டெல்லியில இருக்கிற ஒரு நல்ல ஆஸ்பத்திரியில, வர புதன்கிழமைக்குள்ள சேர்ந்துடுவேன். ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சு பொழைச்செழுந்து வருவேனாங்கிறது சந்தேகம்தான்! அதனால, இப்பவே உங்க அத்தனை பேர் கிட்டயும் விடைபெற்றுக்கிறேன்.

தமிழ்நதி, ரதி, செந்தழல் ரவி உள்ளிட்ட அத்தனை பேருக்கும் வணக்கம். குறுகிய காலத்துல எனக்கு ஃபாலோயரா சேர்ந்திருக்கிற 70 பேருக்கும் வணக்கம். எனக்கு முதன்முதல்ல விருது கொடுத்து ஊக்குவிச்ச ‘என் ரசனை’ பதிவர் ‘ரசிக்கும் சீமாட்டி’க்கு வணக்கம். எனக்குப் புத்தகப் பரிசு கொடுத்து ஊக்குவிச்ச பதிவர் ரவிபிரகாஷுக்கு வணக்கம். கடைசியா, என்னை ஊட்டிக்கு வரச் சொல்லி அன்போடு அழைச்ச பதிவர் லதானந்துக்கு வணக்கம்.

‘போயிட்டு வரேன்’னு சொல்லத்தான் ஆசை. ஆனா, தெரியலை! நாளை என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும்? மறுபடி நான் வரலாம்; வராமலும் போகலாம்!

மனுஷங்களாப் பிறந்தவங்க ஒரு நாள் போய்ச் சேர வேண்டியவங்கதான். அதனால, மரணத்தைக் கண்டு எனக்குப் பயம் ஒண்ணும் இல்லை. ஆனா, என் புஜ்ஜிம்மாவை விட்டு.......

வரேங்க! முடிஞ்சா பின்னாடி சந்திப்போம்.

உங்க அன்புள்ள, கிருபாநந்தினி.

.
Author: கிருபாநந்தினி
•Friday, April 30, 2010
தானந்த் அங்கிள் தன் வலைப்பூவுல, என் பெயரைத் தலைப்புல போட்டு ‘கிருபாநந்தினியும் ரிப் வான் விங்கிளும்’னு ஒரு பதிவே போட்டுருக்காரு. அதுக்கு நன்றி சொல்ல வேணாமா? அதான்... விங்கிளும் அங்கிளும்னு எதுகைமோனையோட ஒரு பதிவு போட்டுட்டேன். அவர் பத்துக் கேள்விகள் கேட்டிருந்தாரு. அதுக்கான பதில்கள்தான் இது.

லதானந்த் அங்கிள் பத்தி எனக்கு அதிகம் தெரியாது. கிருபா எனக்கு பிளாக் பத்தி அறிமுகம் பண்ணி, சுவாரசியமான சில பேரோட பிளாக்குகளைப் பத்திச் சொன்னப்போ, நான் ஆரம்பத்துல படிச்ச சில பிளாக்குகள்ல லதானந்த அங்கிளோட பிளாகும் ஒண்ணு. அவர் மக வயசுதான் இருக்கும் எனக்கு. அந்த உரிமைல அங்கிள்... அங்கிள்னு அவர் பிளாக்ல கமெண்ட் பண்ணிட்டிருந்தேன். அப்புறம் என்னவோ கேள்வி-பதில் போட்டி வெச்சாரு. அதுக்கு நானும் கேள்வி கேட்டிருந்தேன். அதுக்கு அவரு, ‘பிளாக் எழுதாதவங்க கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்றதில்லை’னு ஸ்ட்ரிக்டா சொல்லியிருந்தாரு. வருத்தமாயிடுச்சு எனக்கு. கிருபா கிட்ட சொன்னேன். உடனே பிளாக் ஆரம்பிச்சுக் கொடுத்து, எழுதுன்னு ஊக்குவிச்சாரு.

ஆக, நான் பிளாக் ஆரம்பிச்சு இன்னிய வரைக்கும் எத்தையாச்சும் உளறிக்கொட்டிட்டு இருக்கிறதுக்கான புண்ணியம் அல்லது பாவம் எல்லாம் அங்கிளைத்தான் சேரும். அதனால, எனக்கு வர்ற பாராட்டுகள்லயும் திட்டுகள்லயும் பாதி அவருக்குப் போயிடுறதாத்தான் நான் நெனைச்சுக்கறேன்.

சரி, அவர் கேட்டிருந்த கேள்விகளும் அதுக்கான என்னோட பதில்களும் கீழே:

1. அவசரமாக டாய்லட் போக வேண்டிய தருணத்தில் கழிவறை கிடைக்காமல் திண்டாடியிருக்கிறீர்களா?
கிடையாது. இயற்கை உபாதைகளை ஆம்பிளைங்களாலதான் அடக்க முடியாது. ஒரு விஷயம் சொல்றேன். மன்னர் காலத்துல தூதுவர்களை அனுப்புவாங்க தெரியுமா, அவன் போற குதிரை பொம்பளைக் குதிரையாதான் இருக்கும். ஏன்னா, ஆம்பிளைக் குதிரையா இருந்தா, அங்கங்கே ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம் போறதுக்காக நின்னுடும். பொம்பளைக் குதிரை நிக்காம ஓடிட்டே இருக்கும். இப்ப புரியுதா?

2. யாரைப் பார்த்துப் பொறாமைப் படுகிறீர்கள்?
லதானந்த அங்கிளைப் பாத்துதான்! இந்த வயசுலயும் பாருங்களேன், சின்னப்புள்ள மாதிரி என்னமா ஜாலியா பிளாக் எழுதிட்டிருக்குறாரு!

3. எதிர்பாராமல் கிடைத்த கிளுகிளு அனுபவம் ஏதாவது?

என் கணவர் கிருபாவை நான் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டது பத்தி என் வலைப்பூவுல ஏற்கெனவே எழுதியிருக்கேன். கல்யாணம் நிச்சயமான பிற்பாடு, அதாவது கல்யாணத்துக்கு ரெண்டு மாசம் இருக்கிறப்போ ஒரு நாள் அவர் எங்க வீட்டுக்கு வந்தாரு. கல்யாணத்துக்குப் புடவை எடுத்திருக்கிறதா சொல்லி எங்கப்பா, அம்மா கிட்ட காண்பிச்சாரு. கொஞ்ச நேரம் பேசிட்டிருந்துட்டுக் கிளம்பிப் போனாரு. நானும் அவரை வழியனுப்புறதுக்காகக் கூடவே போனேன். வெளி வராண்டாவுக்குப் போனதும் கிருபா சட்டுனு திரும்பி என்னை இறுக்க அணைச்சுக்கிட்டு ‘ஐ லவ் யூ நந்தினி’ன்னாரு. திடுக்குனு ஆயிருச்சு எனக்கு. உதறி விலகிட்டேன். ‘சாரி... சாரி நந்தினி! ஐ யம் சாரி!’ன்னு அவர் பதறினதை நினைச்சா இப்பவும் சிரிப்பா வருது எனக்கு. அதுக்கப்புறம் கல்யாணம் முடியிற வரைக்கும் அவர் விரல் கூட எம்மேல பட்டதில்லே. எதிர்பாராம கிடைச்ச கிளுகிளு அனுபவம் இதுதான்.

4. நீங்கள் அசடு வழிந்த ஓர் உண்மைச் சம்பவம் சொல்லுங்களேன்?
காலேஜ் படிக்குறப்போ நானும் ப்ரியதர்ஷினிங்கிற என் சிநேகிதியுமா ஒரு ஓட்டலுக்குப் போனோம். சென்னாபட்டூரா ஆர்டர் பண்ணோம். அதுக்கு முன்னே பின்னே நாங்க சென்னாபட்டூரா தின்னதில்லே. முதல்ல ஒரு அகலமான தட்டுல சுண்டல் மாதிரி கொண்டு வந்து வெச்சான் சர்வர். அப்புறம் ரொம்ப நேரமா ஆளையே காணோம். சரி, இதாம் போலிருக்கு சென்னாபட்டூரான்னு நெனைச்சுக்கிட்டு நானும் அவளும் போட்டி போட்டுக்கிட்டு தட்டைக் காலி பண்ணோம். அப்புறமா நிதானமா பூரி மாதிரி கொண்டு வரான். நாங்க சுண்டலைத் தின்னு முடிச்சதைப் பாத்து குபுக்குனு சிரிச்சுட்டான். நான் ரொம்ப அசடு வழிஞ்ச சம்பவம் அது. ப்ரியதர்ஷினி அவன் சிரிச்சது பொறுக்காம வுடு வுடுன்னு செம டோஸ் வுட்டா. மேனேஜர் வந்து சமாதானம் பண்ணும்படியாயிருச்சு!

5. இன்றளவும் உறுத்திக் கொண்டிருக்கும் குற்ற உணர்வு ஏதாவது இருக்கிறதா?

இருக்கு. எட்டாங்கிளாஸ் படிக்கும்போது என் இங்கிலீஷ் புக்கைத் தொலைச்சுட்டேன். அப்பாவுக்குத் தெரிஞ்சா திட்டுவாரேன்னு, என் சிநேகிதி ரம்யாவோட இங்கிலீஷ் புக்கைத் திருடிக்கிட்டுப் போயிட்டேன். மறுநாள், புக் இல்லாம அவ கிளாஸ் டீச்சர் கிட்ட ஸ்கேலால அடி வாங்கினா. எனக்குப் பாவமாயிடுச்சு. அவளோட தொலைஞ்ச புக்கை நானே தேடிக் கண்டுபிடிச்சுக் கொடுத்த மாதிரி அவ கிட்டே திருப்பிக் கொடுத்துட்டேன். அவ வாத்தியார்கிட்ட அடிவாங்கினப்போ பாவமா இருந்துது. அதைவிட, புக்கைக் கண்டுபிடிச்சு(!)க் கொடுத்தப்போ அவ என் கையைப் பிடிச்சுக்கிட்டு ‘தேங்க்ஸ்டி... தேங்க்ஸ்டி...’னு நூறு தேங்க்ஸ் சொன்னாளே, அப்பதான் ரொம்பப் பாவமா இருந்துது. இன்னிய வரைக்கும் என் மனசுல உறுத்திக்கிட்டிருக்குற குற்ற உணர்வு இதுதான்!

6. சினிமாவுக்கு பிளாக்கில் டிக்கட் வாங்கிச் சென்றிருக்கிறீர்களா?
ம்... யார் படத்துக்குன்னு சொன்னா கேலி பண்ண ஆரம்பிச்சுடுவாங்க!

7. நீங்கள் மீறியதிலேயே பெரிய சட்ட மீறல் எது?
இல்லை. அப்படி எதுவும் தெரியலை. ஒரு தடவை ரயில்வே லைனை கிராஸ் பண்ணி கோயமுத்தூர் ஸ்டேஷனுக்குப் போனேன். அப்படி கிராஸ் பண்ணக் கூடாதாமே! அது சட்டப்படி தப்புன்னு பிளாட்பாரத்துல இருந்த பெரியவர் ஒருவர் சொன்னாரு. அது உண்மையா இருந்தா, அதுதான் நான் செஞ்ச பெரிய சட்ட மீறலா இருக்கும்.

8. அனானி கமெண்ட் போட்டிருக்கிறீர்களா? ஆமெனில் யாருக்கு? எப்போது?
யுவகிருஷ்ணாவுக்குப் போட்டிருக்கேன். எதுக்குன்னு ஞாபகம் இல்லே. அவர் போட்டிருந்த பதிவு ஒண்ணு என்னை ரொம்ப உறுத்திச்சு. கடுப்பாகி போட்டேன்.

9. அன்றைய சரோஜாதேவி இன்றைய மஜா மல்லிகா யாருடைய எழுத்து சூப்பர். ஒப்பிடவும்.
நா வரலைப்பா இந்த ஆட்டத்துக்கு!

10. எனது வலைப்பூவில் லிங்க் தரட்டுமா?
தாங்களேன் அங்கிள்! அப்படியாவது நம்ம புகழ் பெருகட்டுமே! என்ன சொல்றீங்க?

.
Author: கிருபாநந்தினி
•Thursday, April 29, 2010
ட்டம், தர்மம் இதப் பத்தியெல்லாம் அடிக்கடி இப்ப ரொம்பப் பேச்சு அடிபடுது! சட்டத்துக்கும் தர்மத்துக்கும் சம்பந்தமே இல்லாதவங்ககூட இது பத்தி நிறையப் பேசுறாங்க. அதனால, இந்த அரைவேக்காட்டுக்காரியும் சைடுல கொஞ்சம் உளறி வைப்போமேன்னுதான் இதை எழுதறேன்.

சட்ட ரீதியா தப்பு இல்லாததெல்லாம் தர்ம ரீதியாவும் தப்பு இல்லாததுன்னு சொல்லிட முடியாது. தர்ம ரீதியா சரியானது எல்லாம் சட்ட ரீதியாவும் சரியானது ஆகிடாது.

உதாரணமா, நம்ம நித்தி மேட்டரையே எடுத்துக்குவோமே! அவர் மேல இப்ப எத்தனையோ வழக்குகள். தங்கம் கடத்தினார், பண மோசடி பண்ணினார்னெல்லாம் புகார்கள் குவிஞ்சிட்டிருக்கு. இதெல்லாம் சட்ட ரீதியான தப்புகள். மாட்டினார்னா (மாட்டினாதான்!) இருக்கு ஆப்பு! ஆனா, இதெல்லாம் மக்கள்ட்ட எடுபடாது. ‘ஆமா! இப்ப எவன் ஊழல் பண்ணலை! இந்தக் கட்சித் தலைவர் குடும்பத்துக்கு இத்தனைக் கோடி ரூபாய் எப்படி வந்துச்சு? ரொம்ப யோக்கியமாதான் சம்பாரிச்சாரா? நித்தி சாமியார் ஏதோ நல்ல காரியம்(!) பண்ணி, பக்தர்கள் அன்பளிப்பா கொடுத்த பணம்தானே அது? கோடி கோடியா வந்து கொட்டுதேன்னு இவனுங்களுக்குப் பொறுக்கலே! அதனால அப்பாவி சாமிய மடக்கி உள்ள போட்டுட்டாங்க’ன்னு மன்னிச்சு விட்டுடுவாங்க. அதனாலதான், அவர் ஒரு நடிகையோடு குஷியா இருக்கும் படங்களை டி.வி-யிலும் பத்திரிகையிலும் மாத்தி மாத்திப் போட்டுட்டிருந்தாங்க.

ஒரு ஆணும் பெண்ணும் விருப்பப்பட்டு, சம்மதப்பட்டு உறவு வெச்சுக்கிட்டா தப்பே இல்லைன்னு அடிச்சு சொல்லுது சட்டம். அப்படிப் பாத்தா நித்தி-ரஞ்சிதா படுக்கையறைக் காட்சிகளை ஒளிஞ்சிருந்து போட்டோ எடுத்தவன்தான் சட்டப்படி குற்றவாளி. அது ஒண்ணும் சினிமா காட்சி இல்லை. அதனால, அவங்க சம்மதம் இல்லாம அதை ஒளிபரப்பின தொலைக்காட்சி மேல கேஸ் போடணும். சின்னக் குழந்தைங்க பார்க்கிற நேரத்துல ‘ஏ’ சர்ட்டிபிஃகேட்கூட போடாம ஒளிபரப்பினதுக்குச் சட்டரீதியா அவங்களைத்தான் தண்டிக்கணும்.

சரி, சட்ட ரீதியா நித்தி-ரஞ்சி செஞ்சது தப்பில்லை. ஆனா, தர்ம நியாயப்படி சரியா? இங்கேதான் சட்டம் வேற, தர்மம் வேறன்னு ஆகுது. மனோதர்மப்படி நித்தி செஞ்சது மகா துரோகம். தன்னை நம்பின பக்தர்களை ஏமாத்தியிருக்கார். ஆஷாடபூதி வேஷம் போட்டிருக்கார். அதனாலதான் மக்கள் கொதிச்செழுந்தாங்க.

இன்னொரு கேஸைப் பார்ப்போம். குஷ்பு ஆன்ட்டி சொன்னது தப்பில்லைன்னு சொல்லிடுச்சு சட்டம். ஒரு ஆணும் பெண்ணும் கல்யாணத்துக்கு முன்னாடியே உறவு வெச்சுக்கலாம், அதுல ஒண்ணும் தப்பில்லை; படிச்ச இளைஞர்கள் யாரும் தங்களோட மனைவி கற்புள்ளவளா இருக்கணும்னு நினைக்க மாட்டாங்கன்னு சொன்னாங்க. அவங்க சொன்னதுல தப்பு இல்லை, தண்டிக்க சட்டத்துல இடமில்லைன்னு சொல்லிடுச்சு நீதிமன்றம். நியாயம்தான். சட்டத்துல இடமில்லைதான். ஆனா, இன்னிக்கு எந்தப் படிச்ச இளைஞர்கள் அப்படி நினைக்கிறாங்க? தன் மனைவி தனக்குத் துரோகம் பண்றாளான்னு ஆள் போட்டு செக் பண்றாங்க. ஒரு கணக்கு எடுத்துப் பாத்தீங்கன்னா தெரியும், கள்ளக்காதல் தொடர்பான கொலைங்க 1995-2000-ல் இருந்ததைவிட 2001-2005-ல் ரெண்டு மடங்கு அதிகமாகி இருக்கு; 2006-2010-ல் நாலு மடங்காகியிருக்கு.

குஷ்பு என்னா சொல்றது... பெரியார் அன்னிக்கே சொல்லிட்டார், ‘கல்யாணம்கிற தளையிலிருந்து பெண்கள் விடுபடணும்’னு. ஆனா, கல்யாணம் இல்லேன்னா குடும்ப அமைப்பு இல்லே; அப்பா, அம்மா, அண்ணன், தங்கைங்கிற எந்த உறவுகளும் இருக்காது. அப்புறம் காட்டுமிராண்டி வாழ்க்கைதான்!

பெண்ணை அடிமைப்படுத்த ஆண் குயுக்தியா கொண்டு வந்த அமைப்புதான் திருமணம்கிறது சிலரோட வாதம். ஆதி நாள்ல அப்படி இருக்கலாம். ஆனா, ஆணை அடிமைப்படுத்துற அமைப்பாதான் இன்னிக்குத் திருமணம் இருக்கு. கல்யாணம் ஆகுற வரைக்கும் ஜாலியா, சந்தோஷமா லைஃபை எஞ்ஜாய் பண்ற இளைஞர்கள் கல்யாணம் ஆன பிறகு முன்னைப் போல ஃப்ரெண்ட்ஸ்களோடு ஊர் சுத்த முடியாம, தன் விருப்பப்படி காசை செலவழிக்க முடியாம, சம்பளத்தை அப்படியே கொண்டு வந்து பெண்டாட்டி கிட்ட கொடுக்குறவங்கதான் அதிகம்.

திருமண அமைப்பே வேண்டாம்னா, அது ஆண்களுக்குக் கொண்டாட்டம்தான். இருக்கிற வரைக்கும் ஒரு பெண்ணோடு ஜாலியா, சந்தோஷமா இருந்துட்டு, அப்புறம் மனசு ஒத்துப் போகலே, திருமணம் வேண்டாம்னு பிரிஞ்சுடலாம். எந்த கமிட்மென்ட்டும் கிடையாதுன்னா சந்தோஷம்தானே! ‘ஒரு ஆண் தன் மனைவியைத் தவிர, வேறு பெண்களோடு ரகசியத் தொடர்பு வெச்சுக்கலாம்; ஆனா, ஒரு மனைவிக்கு அந்தச் சுதந்திரம் கிடையாதா?’ன்னு, ஆடு நனையுதேன்னு அழுகிற ஓநாய்கள் இங்கே நிறைய இருக்கு. தப்பு செய்யற ஆணைத் திருத்துங்கப்பா; பெண்ணையும் ஆணுக்குச் சரியா தப்பு செய்யத் தூண்டாதீங்க ராசா!

இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்றேன். தன் மனைவியைத் தவிர, வேறு பெண்ணோடு தொடர்பு வெச்சிருந்தாலும், பெரும்பாலான ஆண்கள் தங்கள் குடும்பத்தை நிர்க்கதியா விட்டுட்டுப் போயிடறதில்லே. பெண்டாட்டி மேலயும் பிரியமாதான் இருக்காங்க. கணவனின் கள்ள உறவு தெரிஞ்சு, பெண்டாட்டி அவனை டார்ச்சர் பண்றப்போதான் சண்டையே வருது. அதுக்காக, கணவனின் கள்ளத் தொடர்பு சரின்னு நான் இங்கே சொல்ல வரலை. அந்த நிலையிலயும் கணவன் தன் மனைவி மேலயும், பிள்ளைங்க மேலயும் பாசமாதான் இருக்கான்னு சொல்றேன்.

அதுவே, ஒரு பெண்ணுக்கு வேறு ஆம்பிளையோடு தொடர்பு ஏற்பட்டுச்சுன்னு வைங்க, அவ தன் புருஷனையும், ஏன், மணி மணியான பிள்ளைங்களையும்கூட கொன்னு போடத் தயங்க மாட்டா. நான் சொல்றது தப்பா சரியான்னு சமீப கால பேப்பர்களை எடுத்துப் பாருங்க. கள்ளக் காதல் காரணமா, காதலனோடு கூட்டு சேர்ந்து கணவனையும் பிள்ளைங்களையும் கொன்ன பொண்ணுங்க லிஸ்ட்தான் அதிகம்.

இதுல என்ன சைக்காலஜின்னா, ஆணுக்கு வேறு ஒரு பொண்ணு மேல ஏற்படறது ‘வீக்னஸ்’! பொண்ணுக்கு வேற ஒரு ஆண் மேல ஏற்படறது ‘ஸ்ட்ரெங்த்’! ஆண்களுக்கு வேற பொண்ணு மேல ஆசை வந்தாலும், பெரும்பாலானவங்களுக்குக் குடும்பமும் மனைவியும்தான் முக்கியம். அந்தப் பொண்ணு இரண்டாம்பட்சம்தான். ஆனா, வேற ஆண் மேல ஆசை வைக்கிற பொண்களுக்கு அவன்தான் முக்கியம்; கணவனும், குழந்தைங்களும் இரண்டாம்பட்சம்தான்!

அதனால நான் என்ன சொல்ல வரேன்னா, கல்யாணம் பண்ணிக்காமலே ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு வெச்சுக்கிறது சட்டப்படி தப்பில்லாததா இருக்கலாம்; ஆனா, மனோதர்மப்படி தப்புதான்! அம்மாவும் பிள்ளையும், அப்பாவும் பெண்ணும் உடலுறவு கொண்டாலும்தான் சட்டம் எட்ட நின்னு கைகட்டி வேடிக்கை பார்க்கும். அதுக்காக அதையும் சரின்னு சொல்லிடலாமா?

சட்டப்படி தப்பு இல்லேன்னாலே, தர்மப்படியும் அது தப்பு இல்லேன்னு ஆகிடாது. அதே போல, சட்டப்படி தப்புங்கிறதுக்காக மனோதர்மப்படியும் அது தப்புன்னு ஆகிடாது.

பிரபாகரனின் தாயார் இங்கே தமிழ்நாட்டுல சிகிச்சை பெற வந்தாங்க. அவங்களை விமானத்தை விட்டுக் கீழேயே இறங்க விடாம அப்படியே திருப்பி அனுப்பிச்சுடுச்சு தமிழக அரசாங்கம். இது சட்டப்படி தப்பில்லைன்னு வாதிடுது ஒரு கூட்டம்.

பிரபாகரன் மீது பல குற்றச்சாட்டுக்கள் இருக்கு. தேடப்படும் கைதியா அறிவிச்சுது இந்திய அரசு. அவர் கொல்லப்பட்டார்னு சிங்கள அரசு அறிவிச்சு ஒரு வருஷம் ஓடிப்போச்சு. ஆனா, இன்னமும் அவர் இறந்தாரா, உசுரோட இருக்காரான்னே புரியலை. மர்மமா இருக்கு. புத்த பிட்சு வேஷத்துல இருக்கார்னும் வதந்தி.

அதெல்லாம் இருக்கட்டும். பிரபாகரனோட அம்மா பண்ணின பாவம் என்ன? அவங்களை விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்ப வேண்டிய கட்டாயம் என்ன? அவங்க என்ன, தேடப்படும் குற்றவாளியா? நாட்டுக்குள் அனுமதிக்கக்கூடாதவர்கள் பட்டியல்ல அவங்க பேரும் இருக்காம். எதுக்காக அந்தப் பட்டியல்ல அவங்க பேர் இருக்கணும்?

ஏன்... தமிழ்நாட்டை விட்டா அவங்க சிகிச்சை பெற வேற இடமே இல்லையான்னு கேள்வி எழுப்பியிருக்காரு ஒரு படிச்சவரு. வெளிநாட்டுலதான் அவங்க பிள்ளைங்க இருக்காங்க இல்லே, அவங்க வெச்சு, சிகிச்சை அளிச்சுக் காப்பாத்த வேண்டியதுதானேன்னு கேட்டிருக்காரு இன்னொருத்தரு. ‘இட்லிவடை’ன்னு ஒரு பிளாக்ல நான் படிச்சப்போ, எனக்குக்கூட ‘அதானே?’ன்னு தோணுச்சு. ‘நீங்க தைரியமா சொல்லிட்டீங்க; என்னால சொல்ல முடியலையே’ன்னு பின்னூட்டம் போட்டேன். யோசிச்சுப் பார்க்குறப்போ, நான் போட்ட பின்னூட்டம் தப்புன்னு தோணுது.

இங்கே, 80 வயசான இந்தம்மாவுக்கே சொந்த நாட்டுல கால் வைக்க இத்தனை நெருக்கடி இருக்குறப்போ, அவங்க நிலை என்னவோ?

அவங்க எப்படி வேணா இருந்துக்கட்டும்க; சட்டப்படி அவங்களைத் திருப்பி அனுப்பினது நியாயம்னு ‘சோ’ சார் சொல்றது சரியாவே இருக்கட்டும்க; சிகிச்சைக்குன்னு வந்தவங்களைத் திருப்பி அனுப்பினது நியாயமா? என் மனோதர்மப்படி அது மகா தப்புன்னுதான் சொல்லுவேன்.

தன் கிட்டே சிகிச்சைக்குன்னு வந்தவன் ஒரு கொலைகாரனே ஆனாலும், அவனைக் காப்பாத்த வேண்டியது ஒரு டாக்டரோட கடமைன்னு அவங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கு. அப்படியிருக்குறப்போ, சிகிச்சைக்குன்னு வந்த இந்தம்மாவை தமிழ்நாடு அரசாங்கம் திருப்பி அனுப்பினது எந்த வகையில நியாயம்னு எனக்குப் புரியலே.

இங்கே சிகிச்சைகூட எடுத்துக்க முடியாதபடிக்கு அவங்க பண்ணின தப்பென்ன? வயசான ஒரு பாட்டியம்மாவால தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கே கெட்டுடும்னா அதைவிட காமெடி வேற இல்லீங்க.

‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் சொந்த நாட்டானையே சுரண்டுவது எப்போது?’ன்னு வசனம் எழுதினார் கருணாநிதி. ‘இப்போது’ன்னு கத்திச் சொல்லணும்போல இருக்கு எனக்கு.

.
Author: கிருபாநந்தினி
•Friday, April 23, 2010
திவு எழுதி ரொம்ப நாளாச்சுங்ணா... நாளச்சுங்கக்கா!

புடிக்கலை; எழுதுறதையே உட்டுடலாம்னு இருந்தேன். கிருபாதான், ‘சும்மா எழுது! தப்பா ஒண்ணும் எழுதலியே? உன்னோட அபிப்ராயங்களத்தானே எழுதறே? அது சில பேருக்குப் புடிக்கலேன்னா, அதுக்கு நாமென்ன பண்றது?’ங்கிறாரு.

பொதுவா எல்லாரும், உங்க கருத்த தகிரியமா சொல்லோணும்கிறாங்க; அப்படிச் சொன்னா, உனக்கு ஒரு கருமமும் தெரியலங்கிறாங்க; சிலர் நாம எழுதுறதைப் பாராட்டுறாங்க; அவிங்களைப் பத்தியே வெளிப்படையா நம்ம கருத்தச் சொன்னா, மூஞ்சத் திருப்பிக்கிட்டுப் போயிர்றாங்க! கருத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம்னு வெறுமே பேசிட்டிருக்கோம். கருத்து சொன்னா பதிலுக்கு எதிர்க் கருத்து சொன்னா பரவால்ல; நீ இன்னா கருத்து சொல்றதுன்னு திருப்பிக் கேட்டா இன்னா சொல்றது? ஆனா, அப்படிக் கேக்குறவங்க எல்லாம் அவங்க கருத்தச் சொல்லலாமாம்; அத எல்லாரும் ஏத்துக்கணுமாம்! நம்ம கருத்தச் சொல்லக்கூடாதாம்! இதான் நாட்டுல நியாயமாட்டம் இருக்குது!

அதான், நான் மத்தவங்க வலைப்பூக்களைப் படிச்சிட்டு, கமெண்ட் மட்டும் போட்டுட்டு நகந்துர்றது. தமிழ்நதியோட வலைப்பூவுல சில மேட்டர் பாத்தேன். எனக்குச் சிலது புரியலை. விளக்கம் கேட்டேன். சொல்லிச்சு. மறுபடி புரியலை. திரும்பக் கேட்டேன். ‘உனக்குப் பதில் சொல்லிட்டிருக்கிறதே எனக்கு வேலை இல்லை’ன்னு அக்கா கோவிச்சுக்கிச்சு. சரின்னு, கட்டக் கடைசியா ஒரே வரி கமெண்ட் மட்டும் போட்டுட்டு நகந்துட்டேன். அதை தமிழ்நதி பப்ளிஷ் பண்ணலை. அவ்ளோ காண்டு எம் மேல!

ரொம்ப ரசிச்சுப் போட்ட அந்த கமெண்ட்டை மட்டும் என் ஆசைக்கு இங்கே போட்டுட்டு, அடுத்த மேட்டருக்கு நகந்துர்றேன்.

//ஆறுவது சினம்; கூறுவது தமிழ்(நதியல்ல)! நன்றி தமிழ்நதி!//

ஓகே! நான் இனிமே ஒருத்தர் வம்புக்கும் போறதா இல்ல. உட்டேன்... உட்டேன்... உட்டுட்டேன்..!

உருப்படியா(!) சில கட்டைங்களைப் பத்திப் பேசலாம்.

‘கட்ட... கட்ட... கட்ட... நாட்டுக்கட்ட...’ன்னு ஒரு பாட்டு இருக்குது. விக்ரமும் கிரணும் ஆடுற பாட்டு. கிரணக்காவ நாட்டுக்கட்டன்னு சொல்லிப் பாடுறாரு விக்ரம். அத எந்தத் தாய்க்குலமும், மனைவிகுலமும், மகள்குலமும் எதிர்த்த மாதிரி தெரியல. நேத்துக்கூட அந்தப் பாட்டு டி.வி-யில ஓடிச்சு. மேல்மாடியில குடும்பத்தோட ஒக்காந்து ரசிச்சுக்கிட்டுத்தான் இருந்தாங்க.

பொம்பளைங்களை ‘கட்ட’ன்னு சொல்றது, ‘ஃபிகர்’னு சொல்றதுல ஆம்பளைங்களுக்கு அவ்ளோ ஆசை. கணக்குப் பண்ணிடலாம்கிற ஆசையில ஃபிகர், உணர்ச்சியே இருக்கக்கூடாதவ பொண்ணுங்கிற மனோபாவத்துல ‘கட்ட’... இப்படி பொம்பளைங்களை மட்டப்படுத்திப் பேர் வைக்கிறதைக்கூடப் புரிஞ்சுக்காம சில பொம்பளைங்க அதைக் கேட்டுக் கெக்கெக்கேன்னு சிரிக்குறதைப் பாத்தா, எனக்குப் பத்திக்கிட்டு வருது.

சரி, அந்த மூஞ்சி மொகரக்கட்டைகளை விடுங்க! நாம கட்ட ஆராய்ச்சிக்குப் போகலாம்.

முந்தியெல்லாம் ‘கட்டை’யானவன்னு சொன்னா, கொஞ்சம் அகலமா, ஆனா குள்ளமா வளர்ந்தவனைக் குறிக்கும். கட்டை விரல் மத்த விரல்களைவிடக் கட்டையா, குட்டையாதானே இருக்கு!

பாகவதர் ஏழரைக்கட்டை சுருதியிலே பாடறார்னு சொல்லுவாங்க. அந்தக் கட்டை எதைக் குறிக்குதுன்னு எனக்குத் தெரியலே. நாலு கட்டையில பாடுறதும்பாங்க. குரல் தொனியோட அதிர்வு எண்ணைக் குறிக்குதா அந்தக் கட்டைன்னு யோசிக்கிறேன்.

கிராமத்துல பாட்டிமார்களெல்லாம் ‘அடக் கட்டைல போறவனே’ன்னு சர்வ சாதாரணமா திட்டி நான் பாத்திருக்கேன். திருவிளையாடல் படத்துல ‘கட்டைல போகாம நீ மட்டும் கழுதை மேலயா போவே?’ன்னு கேப்பாரு சிவா(ஜி). இப்ப அந்த வசனம் செல்லாது... செல்லாது! ‘கட்டைல போகாம நான் கரண்ட்ல போவண்டா பேராண்டி’ன்னு ஆயா சொல்லிடும்.

பாவம், பச்சக் கொழந்தை! வாயில கட்ட விரலைக் கொடுத்தாக்கூடக் கடிக்கத் தெரியாதுங்கிற மாதிரி சில பேர் நடந்துக்குவாங்க (‘நீதான்... நீதான் அது!’ சில பேர் என்னைப் பாத்துக் கத்துற சத்தம் கேக்குது!) பயில்வான்கிட்டே கர்லாக் கட்டை இருக்கும். பயில்வான் ரங்கநாதன்கிட்டே இருக்குமான்னு தெரியலே. ‘கர்லா’ன்னா என்ன அர்த்தம்னு எனக்குத் தெரியலே!

டி.வி-யில மாமியார்-மருமக சண்டை இல்லாத சீரியலே இல்லே. நேத்திக்கு ஒரு சீரியல்லே, ‘ஏண்டி மரக்கட்டை மாதிரி நிக்கிறே! சீக்கிரம் எல்லாத்தையும் ரெடி பண்ணு, போ!’ன்னு சீரியல் மாமியார் சீரியல் மருமகளைப் பாத்து சீறிக்கிட்டிருந்ததைப் பாத்தேன். அப்படித்தான் சில மாமியார்களுக்கும் மருமகள்களுக்கும் அதிர்ஷ்டக் கட்டையாகி, அடிதடி உறவுகள் வாய்ச்சுடுது. எரிச்சல்லே மருமக ‘இந்தக் கிழங்கட்டை என்னிக்கு மண்டையப் போடுமோ’ன்னு மாமியார் காதுல விழுவுற மாதிரியே புலம்பிட்டுப் போவா. மாமியார்க்காரி கொஞ்சம் தெம்பா இருந்தா, “என்னாடி சொன்னே?”ன்னு மருமக கையை முறுக்கி, மணிக்கட்டை உடைப்பா. சீரியல் பாத்துப் பாத்து எல்லா வீடுகள்லேயும் டெய்லி நெஜம்மாவே நடக்கிற கதையாயிடுச்சு இது.

“பையனுக்குக் காலாகாலத்துல ஒரு கால்கட்டைப் போடுங்க. எவ்வளவு நாள்தான் அவன் ஒண்டிக்கட்டையா இருப்பான்?”ன்னு அம்மாக்கள் நச்சரிக்கிறதுக்குக் காரணம், வெறும் காத்துல எவ்வளவு நாள்தான் நாம குத்து விட்டுப் பழகுறது, எதிர்ல ஒரு ஆள் இருந்தாத் தேவலையேன்னு நினைக்கிறதுதானோன்னு ஒரு யோசனை வருது. அப்புறம் அடிதடியில மருமக கை ஓங்கிச்சுன்னா, மாமியார் உடம்புதான் கொழுக்கட்டை கொழுக்கட்டையா வீங்கிக்கும்.

சரி, கட்டை ஆராய்ச்சியை இத்தோட நிறுத்திக்குவோம். இனிமே இப்படியேதான் எழுதப்போறேன். இப்ப யாரும் போட மாட்டாங்கன்னு நெனைக்கிறேன் என் எழுத்துக்கு முட்டுக்கட்டை?

.
Author: கிருபாநந்தினி
•Tuesday, March 30, 2010
காப்பிய நாயகியின் பெயரைத் தன்னோட பெயரோடு ஒட்ட வெச்சிருக்கிற ஒரு கவிதாயினியம்மா ரொம்ப ஆபாசமா எழுதுதுன்னு ஒரு மேட்டர ஜூனியர் விகடன்ல படிச்சுத் தொலைச்சுட்டேன். நானே பொதுவா இந்த ஜூனியர் விகடன், நக்கீரன், ரிப்போர்ட்டர் மாதிரியான ‘மிலிட்டரி’ ரகப் புஸ்தகங்களைப் படிக்க மாட்டேன். எப்பவாவது புரட்டிப் பார்க்கிறதோட சரி! அப்படியிருக்கிற நானே எப்பவாவது அத்தி பூத்த மாதிரி படிக்கிறப்போ, கெரகம்... எனக்குன்னு இப்படியா வந்து விடியணும்? சே..! நமக்குன்னு வந்து மாட்டுதுங்கப்பா!

ஜூனியர் விகடன்ல படிச்சதுதான் படிச்சேனே, மகா பாவி அதை அத்தோட விட்டுட்டு என் வழியைப் பார்த்துக்கிட்டுப் போயிருக்கக்கூடாதா! அங்கேதான் ரெண்டாவது தப்பைப் பண்ணிட்டேன். இன்னாவோ உலகத்திலேயே ரொம்ப அழகான பொண்ணுன்னு தன்னைச் சொல்லிக்குதே அந்தப் பொண்ணுன்னு, அதன் வலைப்பூவைத் தேடிப் போய்ப் படிச்சேன். உவ்வ்வ்வேய்ய்ய்க்க்க்க்! அப்ப ஆரமிச்ச வாந்தி எனக்கு இன்னும் நிக்கவேயில்லீங்க! தொடர்ந்து ஒரே உமட்டல், குமட்டல்தான்! அதான், பதிவு போடுறதுக்கு இம்புட்டு நாளாயிருச்சு.

ஏன் இப்படியெல்லாம் ஆபாசமா எழுதுதுன்னு கேட்டதுக்கு அந்தம்மா சொல்லுது, பாலியல் அத்துமீறல்களைப் பத்திக் குரல் கொடுக்குதாமா! பெண்ணிய வேதனைகளைப் பிரதிபலிக்குற அதன் எழுத்துக்கள் இதே வீச்சத்தோடுதான்... ஸாரி, வீச்சோடுதான் தொடருமாமா!

இது எப்படித் தெரியுமா இருக்குது... சில வருஷத்துக்கு முன்னால, கோயமுத்தூரு ரயில்வே ஸ்டேஷன் பக்கம் ஒரு பாவப்பட்ட, பைத்தியக்காரப் பொம்பளை திரிஞ்சுக்கிட்டிருந்துச்சு. ஒடம்புல ஒட்டுத் துணி இருக்காது. ‘வாடா, வா! எத்தினி பேரு வேணாலும் வாங்கடா! இந்தாடா என் ஒடம்பு. இதானே ஓணும் உங்களுக்கு. எடுத்துக்குங்கடா!’ன்னு மானாவாரிக்கு ஆபாசமா கத்தும். யாராச்சும் பொம்பளைங்க பாத்து, அதை மறைவுக்கு இட்டுக்கினு போய், நைட்டி ஒண்ணை மாட்டி வுட்டு அனுப்புவாங்க. ரெண்டு நாள்தான் அந்த நைட்டி அதும் ஒடம்புல இருக்கும். மூணாம் நாள் மறுபடி பிறந்தமேனிக்கா திரிஞ்சிட்டிருக்கும். பாவம் அந்தப் பொம்பளை! சொல்லவே கஷ்டமா இருக்குது. எவனோ கசுமால நாயிங்க அதைக் கெடுத்துப்பிட்டிருக்காங்க. மூளைக் கோளாறாயிருச்சு. அதனால, தான் என்ன பண்றோம்னு தெரியாம, மாட்டி வுடற டிரஸ்ஸைக்கூடக் கழட்டிக் கழட்டிப் போட்டுடும்.

மனச் சிதைவுக்கு ஆளாயிட்ட அந்தப் பாவப்பட்ட பொம்பளைக்கும், இந்தப் பாட்டு எழுதுற பொம்பளைக்கும் எனக்கு அதிக வித்தியாசம் தெரியலே. ஒரே ஒரு வித்தியாசம்தான். தான் இன்னது செய்யறோம்னு தெரியாம செய்யுது அது; இது வீம்புக்குன்னே செய்யுது.

பெண் உறுப்புகளைக் கவிதையில எழுதுறதை நியாயமாக்கி வாதாடுறவங்க ஆ, ஊன்னா ஆண்டாள் கவிதையையும், கந்த சஷ்டி கவசத்தையும், இன்னும் சில பக்தி இலக்கியங்களையும் துணைக்கு இழுத்துக்கிறாங்க. அதுல எல்லாம் பெண் உறுப்புகள் பேர் சொல்லப்படலையான்னு கேக்குறாங்க. இவங்களே வேற ஒரு சந்தர்ப்பத்துல, பக்தி இலக்கியங்களைத் தாக்கணும்னு வரப்போ, ஆ... ஆபாசக் குப்பைன்னு அதையே உதாரணம் காட்டுவாங்க.

ஒண்ணு சொல்றேன். அந்தப் பாடல்கள் எழுதப்பட்ட காலம் வேற. அந்தக் காலத்துல அந்த வார்த்தைகளை ஆபாச வார்த்தைகளா யாரும் எடுத்துக்கலே. இன்னிக்கு நல்ல நல்ல வார்த்தைங்களே ஆபாச வார்த்தைகளாயிருச்சே! பஜனைங்கிறது படு ஆபாசமான வார்த்தை ஆயிருச்சு. இன்னிக்குக் குமுதம் பக்தி ஸ்பெஷல் பார்த்துக்கிற ப்ரியா கல்யாணராமன் பல வருஷங்களுக்கு முன்னால குமுதத்துல அந்த ‘பஜனை’ங்கிற வார்த்தையை ஒரு சிறுகதையில படு ஆபாசமான முறையில பயன்படுத்தியிருப்பாரு. மெதுவடை, கீரைவடைங்கிற வார்த்தைகளையெல்லாம் ஆபாச வார்த்தைகளா சினிமாவுல பயன்படுத்த ஆரம்பிச்சுப் பல வருஷமாச்சு.

மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்’னு திருவள்ளுவர் சொல்றாரு. அதுக்காக, அவர் சொல்ற அந்த வார்த்தையையும், இந்த ‘ஒலக அழகி’ தன் கவிதை(?!)யில சொல்ற அதே வார்த்தையையும் ஒரே தராசுல நிறுத்துப் பார்க்க முடியுமா என்ன?

ஜூனியர் விகடன்ல இந்தம்மா கவிதை பத்தி வேலை மெனக்கிட்டு ஏழெட்டுப் பேர் கிட்ட கருத்து கேட்டுப் போட்டிருக்காங்க. ரொம்ப முக்கியம் பாருங்க!

சில பேரோட கருத்துங்களைப் பார்ப்போம்.

சாகித்திய அகாதமி விருது வாங்கினவராம் நீல பத்மனாபன். போலீஸ் அதிகாரிகளுக்கு இலக்கிய ஆராய்ச்சி நடத்துவதற்கான அனுபவமோ நேரமோ இருக்குமான்னு இவருக்குச் சந்தேகமாம். அதனால இதைச் சட்டரீதியா அணுகக் கூடாதுங்களாம். எனக்குப் புரியலீங்க. ஏங்க... போலீஸ்காரங்கன்னா முட்டாளுங்களா என்ன? காவல்துறை அதிகாரிகள்ல எத்தனை எத்தனை பேர் நல்ல இலக்கிய அறிவோட இருந்திருக்காங்க! அதுவுமில்லாம இந்தம்மா எழுதின குப்பையை இலக்கியம்னு தலையில தூக்கிட்டு வராரே இவரு, கஷ்டம்டா சாமி! இதைச் சட்ட ரீதியா அணுகக்கூடாதுன்னா, நாளைக்கு நித்தி சாமியாரும், “நான் பண்றது யோகம். அன்னிக்கு வீடியோவுலயும் அந்த நடிகையோடு யோக ஆராய்ச்சிதான் நடத்திக்கிட்டிருந்தேன். அதைப் புரிஞ்சுக்கிறதுக்கான அனுபவம் போலீஸ் அதிகாரிங்களுக்கு இருக்குமான்னு சந்தேகம்”னு சொல்வாரு. ஒத்துக்குவீங்களா?

அடுத்தாப்ல சாரு நிவேதிதா. இவரைப் பதிவுலகத்திலயும் பத்திரிகையுலகத்திலயும் ரொம்பப் பேரு காமெடியனாத்தான் பாக்குறாங்க. இவரு வாயைப் புடுங்கி எதுனா விவகாரம் கெளப்பலாமான்னு ஆசைப்பட்டிருக்கு ஜூனியர் விகடன். நித்தி சாமியார் விவகாரத்துல இவர் அடிச்ச பல்டி, அந்த வீடியோவைவிட சூப்பரு! இவர் சொல்றாரு, பாலியல், அந்தரங்கம் குறித்த படைப்புகளை ஓர் ஆண் எழுதியிருந்தா இந்த அளவு பிரச்னையாகி இருக்காதாம். ஏங்க... பாய்ஸ் படத்துல எழுதின ஆபாச வசனத்துக்காக எழுத்தாளர் சுஜாதாவைத் தொரத்தித் தொரத்தி அடிச்சாங்களே, மறந்துட்டீங்களா? ஆபாசத்துக்கு எதிரானவங்க சினிமாவையும் சின்னத் திரையையும் விட்டுட்டு எழுத்தாளர்கள் மேல பாயுறது எந்த விதத்துல நியாயம்னு கேக்குறாரு சாரு. யாருங்க விட்டது? யாரும் விடலீங்க. அப்பப்போ எதிர்ப்பு தெரிவிச்சுக்கிட்டுதான் இருக்காங்க. சொல்லப்போனா, ஆ, ஊன்னா சாணி வாளியைத் தூக்கிட்டு ஆபாச சினிமா போஸ்டர்கள் மேல ஊத்தக் கெளம்பிடற, நியூ படம் எடுத்ததுக்காக டைரக்டர் எஸ்.ஜே.சூர்யாவை ஒரு காட்டுக் காட்டின மகளிர் அமைப்புங்க, இந்தம்மா எழுத்தைக் கண்டும் காணாம இருக்குங்கிறதுதான் உண்மை.

‘எழுதுவதற்குச் சுதந்திரம் இருக்குங்கிறதுக்காக எதையும் எழுதிக் குவிக்கலாம் என்பது சரியா? சமூகத்தின்மீது நமக்கு இருக்கும் பொறுப்போடு நாகரிகத்துடன் நம் படைப்புகளைக் கொண்டு போய்ச் சேர்ப்பதுதான் நியாயம்’னு சொல்லியிருக்கும் டைரக்டர் மதுமிதா, ‘சமூகத்தில் விபசாரம் செய்வோர் உருவாக இலக்கியங்கள் காரணமாகும் நிலை வந்தால், அந்தச் சமூகம் உருப்படுமா?’ன்னு பொட்டில் அடித்தாற்போல் கேட்டிருக்குற பிரான்ஸ் வலைப்பதிவாளர் தமிழச்சி, ‘எழுத்துக்கும் தணிக்கை ஏற்படுத்த வேண்டும் என்கிற போராட்டங்களுக்கான காரண கர்த்தாக்களில் ....வும் இருப்பார்’னு நறுக்குனு சொல்லியிருக்கிற வழக்கறிஞர் திலகவதி மூணு பேருக்கும் என் சாஷ்டாங்க நமஸ்காரங்களைத் தெரிவிச்சுக்கிறேன்.

முன்னேயே ஒருமுறை நான் சொன்னதுதான்... மறுபடியும் சொல்றேன். பெண்ணுரிமை, பெண் சுதந்திரம்னு உசுப்பேத்தி உசுப்பேத்தி சில ஆம்பிளைங்க பெண்களைத் தங்கள் வழிக்குக் கொண்டு வந்து எக்ஸ்ப்ளாய்ட் பண்ணத் துடிச்சிட்டிருக்காங்க. ரொம்பப் புத்திசாலின்னு தன்னைத் தானே நெனைச்சிட்டிருக்கிற சில பொம்பிளைங்களும் அந்தப் பேச்சுல மயங்கித் தப்பான வழியில போயிடறாங்க.

நித்தி சாமியார் மாதிரியே இன்னொரு தாடிச் சாமியாரும் பல வருஷத்துக்கு முன்னால இப்படித்தான் பேசிப் பேசி பெண்களை வளைச்சுப் போட்டாரு. ஆம்பிளைங்க என்ன தப்பு வேணாலும் செய்யலாமா, நீங்களும் அவங்களுக்குச் சமதையா எத்தனை ஆம்பிளைங்களோடு வேணாலும் தொடர்பு வெச்சுக்குங்க, ஒண்ணும் தப்பில்லேன்னு போதிக்க ஆரம்பிச்சாரு. கல்யாணமான/ கல்யாணமாகாத ஆண்களும் பெண்களும் ஒண்ணாகக் கூடிக் கும்மாளம் அடிக்கக் கூட்டங்களும் ஏற்படுத்தினாரு. அப்புறம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்போலத் தெரிஞ்சதும் உஷாராகி, அந்தக் கூட்டங்களை நிப்பாட்டிட்டாரு.

ஆகவே... என் சகோதரிகளே, சிநேகிதிகளே! பாத்து புத்தியா பொழைச்சுக்குங்க. எல்லா ஆம்பிளைங்களும் அயோக்கியங்க இல்லே; அது போல, எல்லாப் பொம்பிளைங்களும் யோக்கியமும் இல்லே! அவ்வளவுதான், சொல்லிட்டேன்!
.
Author: கிருபாநந்தினி
•Sunday, March 14, 2010
ருத்ரன் ஐயா! வணக்கங்கய்யா! நல்லாருக்கீங்களா?

உங்களை நான் ரொம்ப உயர்வா மதிக்கிறேன். என் வலைப்பூவை நீங்க படிச்சுப் பார்த்ததோட மட்டுமில்லாம, பாராட்டிப் பின்னூட்டம் இட்டது எனக்குப் பெரிய கௌரவம். அதனாலதான் தலைகால் புரியாத மகிழ்ச்சியில நன்றி சொல்லி எழுதினேன். அதுக்காக தமிழ்நதி உள்ளிட்ட சில பேர்கிட்ட வசவையும் கேலிப் பேச்சையும் வாங்கிக் கட்டிக்கிட்டேன். அதுக்காகக் கூட நான் வருத்தப்படலீங்கய்யா..! எனக்கு வக்காலத்து வாங்கினதுக்காக உங்களைக் கூட சில பேரு கன்னாபின்னானு திட்டி எழுதியிருந்தாங்க. அதுதான் என்னை வருத்தப்பட வெச்சுது. எனக்காக நீங்க திட்டு வாங்கும்படி ஆயிருச்சேன்னு உண்மையிலேயே ரொம்ப வேதனைப்பட்டேங்கய்யா!

ஆனா, இப்ப எனக்கு அதைவிடப் பெரிய வேதனை என்னான்னா, என் மதிப்புக்குரிய உங்களையே விமர்சனம் பண்ணி, கண்டிச்சு பதிவு எழுதும்படி ஆயிருச்சேன்னுதான்!

ஆமாங்கய்யா! நான் உங்க ஃபாலோயரா இருக்கேன். தவறாம உங்க பதிவுகளைப் படிச்சுட்டு வரேன். அதுல ஓவியத் தாத்தா எம்.எஃப்.ஹுசேனுக்கு வக்காலத்து வாங்கி நீங்க எழுதியிருந்ததைப் பார்த்து எனக்குக் கடுப்பாயிருச்சுங்கய்யா! இந்து மதத்துலதான் உங்களை மாதிரி ரொம்பப் பேர், ‘நாங்க நடுநிலைமைவாதிங்க; மதச்சார்பின்மைவாதிங்க; இந்து மதத்தையே திட்டுவோம். இந்துக்களை மட்டும்தான் கண்டிப்போம். மத்தபடி எவன் என்ன செஞ்சாலும் பொத்திக்கிட்டுப் போயிருவோம்’னு யோக்கிய வேஷம் போடுறவங்க இருக்காங்க. வேற எந்த மதத்துலயும் இல்லீங்க. அப்படியே ஒருத்தன், ரெண்டு பேர் இருந்தாலும் அவன் உசுருக்குப் பயந்து ஓடி ஒளிஞ்சு, தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியதுதான். உங்களை மாதிரி தைரியமா ஊருக்குள்ள நடமாடிட்டிருக்க முடியாது.

நாஸ்திக வாதம் பேசுறவனையும் அரவணைச்சுப் போற மதம் இந்து மதம்தான். அதனாலதான் உங்களை மாதிரி ஆளுங்கள்ளாம் மனச்சாட்சியை அடகு வெச்சுட்டு, நம்மவங்களையே போட்டுக் காய்ச்சி எடுக்குறீங்க. அடுத்தவன் பண்ணின தப்பை தைரியமா எடுத்துச் சொல்லப் பயப்படுறீங்க; அல்லது, அடுத்தவனைக் குத்தம் சொல்றதுல என்னா இருக்கு; நம்மாளைச் சொன்னாலாவது நடுநிலைமையான ஆள்னு தலைல தூக்கி வெச்சுக் கொண்டாடுவாங்கன்னு நினைக்கிறீங்க.

\\அவன் செய்தது எல்லாம் சில ஓவியங்கள் வரைந்ததுதான்; அது குற்றமாகப் பார்க்கப்படுவது அவன் ஒரு முஸ்லிம் என்பதால்தான்!// நீங்கதான் அப்படிக் கோணல் புத்தியோட நினைக்கிறீங்க. வரைஞ்சது கிறிஸ்துவரா இருந்தாலும், இந்துவாவே இருந்தாலும்கூட இதே அளவு எதிர்ப்பு வந்திருக்கத்தான் செய்யும். நீங்க உங்க வசதிக்கு மதச் சாயம் பூசி மழுப்பாதீங்க.


\\அவனுக்கு என்ன எதிர்ப்பு? அவன் ஒரு மதத்தினரின் மனத்தைப் புண்படுத்திவிட்டானாம்! அதனால் அவன் இந்தியாவிற்குள்ளே வரக்கூடாதாம்! ஒரு மசூதியை இடித்து, அதன் மூலம் பல முஸ்லிம் மனங்களை நொறுக்கியவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.// ஐயா! மசூதியை இடிச்சது தப்புதான். அதை யாரும் சரின்னு சொல்லலே! மகா தப்பு. அதுக்காக ஹூசேன் பண்ணது சரியாயிடுமா? எதுக்கும் எதுக்கும்யா முடிச்சுப் போடுறீங்க? மசூதியை இடிச்ச மகா பாவிங்களை என்னென்ன திட்ட முடியுமோ திட்டுங்க. நாங்களும் கூடச் சேர்ந்து குரல் கொடுக்குறோம். அதுக்காக இந்த ஆளு தன் இஷ்டத்துக்கு கேவலப்படுத்தி இந்துச் சாமிகளைப் படம் வரைவாரு; நாங்க பார்த்துக்கிட்டு கம்முனு இருக்கணுமா? ஏன்யா இப்படி வரையறீங்கன்னு கேக்கக்கூடாதா? என்னாங்கய்யா நியாயம்?

\\அவன் என்ன அப்படிக் கேவலமாக வரைந்தான்? சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்தான் என்பதே குற்றச்சாட்டு! சீதையும் அனுமனும் நெருக்கமாக இருப்பதாய் வரைந்தான் என்று ஒரு குற்றச்சாட்டு!! நெருக்கமாய் இருந்ததால்தானே தூதுவனிடம் தன் மோதிரம் தந்தாள்? நிர்வாணமான சரஸ்வதிக்கு ரவிவர்மா ஜாக்கெட் போட்ட படம் எந்தக் காலத்தில்?
// நல்லாக் கேக்குறீங்கய்யா கேள்வி. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா... நீங்க தலையில தூக்கி வெச்சுக் கொண்டாடுற ஹூசேன் ஒரு பேட்டியில சொல்லியிருக்காரு... ‘ஒருத்தனை மட்டம் தட்டி இகழ வேண்டுமானால், வேறெதுவும் செய்யத் தேவையில்லை; அவனை நிர்வாணமாய் வரைந்தால் போதும்!’னு. அப்படின்னா என்ன அர்த்தம்... இவரு இந்துச் சாமிகளை மட்டம் தட்டி இகழுறதுக்காகத்தானே அப்படி வம்படியா வரைஞ்சுக்கிட்டிருக்காரு!

அப்புறம் என்னா கேட்டீங்க... சரஸ்வதிக்கு ரவிவர்மா ஜாக்கெட் போட்டது எந்தக் காலத்தில்? ஐயா... நம்ம ஆதி முன்னோருங்க ஆடையே இல்லாம நிர்வாணமா சுத்திட்டிருந்தாங்க. அதுக்காக நாமளும் அப்படியே சுத்திட்டிருக்கணும்னா எப்படிங்கய்யா? இன்னிய கதைய பேசுங்க.

\\கடவுளுக்கு மனித முகம் எப்போது வந்தது? ரவிவர்மா வரைந்த சரஸ்வதி மாதிரிதான் அவள் இருப்பாளா? ரவிவர்மா காலத்தில் பார்டர் வைத்த ரவிக்கையை அவளுக்குப் போட்டு அழகு பார்த்தால், இப்போது ஸிலீவ்லெஸ் டாப்ஸுடன் அவளை அழகுப் படுத்தலாமா? ரவிவர்மா என்ன பிரம்மலோகத்தில் எடுத்த பாஸ்போர்ட் படத்தை மாடலாக வைத்துத்தான் அவளைப் படம் வரைந்தாரா? ஹொய்ஸாலா சிற்பங்களில் பலவற்றில் அவளுக்கு ஆடை அணிவிக்கப்படவில்லை! அவற்றைப் பார்க்கும் போது பாலுணர்வு தூண்டப்படுகிறதா? அவை ஆபாசமாகத் தெரிகின்றனவா?//

மன நல மருத்துவர் இல்லீங்களா... அதான், உக்காய்ந்து யோசிச்சுக் கேள்விகளைக் கேட்டிருக்கீங்க. சூப்பருங்கய்யா! பெரியார் கட்சிக்காரங்களுக்குக்கூட இப்படியெல்லாம் கேக்கத் தோணுமோ, என்னவோ! சிற்பங்களைப் பார்த்தா ஆபாசம் தோணாதுங்கய்யா; வக்கிரமான ஒரு சின்ன கோட்டுப் படத்தைப் பார்த்தா தோணும். வெள்ளைக்காரப் பொண்ணுங்க டூ பீஸ் டிரஸ்ல வந்தா தப்பா, ஆபாசமா தோணாதுங்க; நம்ம பக்கத்து வீட்டு, எதிர் வீட்டுக்காரம்மா அப்படி வந்தா தோணும். டென்னிஸ் ஆடுற பொம்பளைங்க குட்டைக் கவுன் போட்டுட்டு வந்தா ஆபாசமா தோணாதுங்க; ஆபீஸ்ல கூட வேலை செய்யுற பொம்பளைங்க அப்படி வந்தா தோணும். நாம எப்படியான சூழ்நிலையில இருக்கோம்கிறதைப் பொறுத்ததுதான் எது ஆபாசம், எது ஆபாசம் இல்லேங்கிற விஷயம்! உங்களுக்குத் தெரியாதது இல்லீங்க. சரஸ்வதிக்கு ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் போட்டு அழகுபடுத்தலாமான்னு மேதாவித்தனமா ஒரு கேள்வி கேட்டிருக்கீங்க. போடலாங்கய்யா! ஆனா, இப்ப இல்லே; நூறு, இருநூறு வருஷங்களுக்கப்புறம் அப்படியும் ஒரு காலம் வந்தாலும் வரும். அப்ப எல்லாருமே பழைய காட்டுமிராண்டிக் காலத்துக்குப் போய், ஆடையில்லாம திரிஞ்சுட்டிருப்பாங்களா இருக்கும். அப்ப, சரஸ்வதி ஜீன்ஸும் டாப்ஸும் போட்டுக்கட்டும். இப்ப வேணாங்கய்யா!

\\சிவனை, விஷ்ணுவை, முருகனை நிர்வாணமாக வரைவதில் யாருக்கும் பெரிய ஆத்திரம் இருப்பதாகத் தெரியவில்லை. பெண் தெய்வங்களின் கற்பு பற்றித்தான் இவர்களுக்கு அதிகம் கவலை வருகிறது. வர்த்தகத் திரைப்படக் கதாநாயகன் போல உடனே சட்டையைக் கழற்றி அவள் மீது போர்த்திவிடத் துடிக்கிறார்கள்.// ஐயா, பெண்களை உயர்ந்த இடத்தில் வெச்சுக் கொண்டாடுறது இங்கேதாங்க. ‘பெண்களைச் சுயமா சிந்திக்க விடலே, அடிமைகளா வெச்சிருக்காங்க’ன்னு ஒரு கோஷ்டி புலம்பிக்கிட்டிருக்கு. மகளிரை நாங்கதான் முன்னேத்தப் போறோம்கிறாங்க. பெண்களை பிரெயின்வாஷ் பண்ணி, அவங்களுக்கு நல்லது பண்றதா பொய் சொல்லி, சுதந்திரம் வாங்கிக் கொடுக்குறதா சொல்லி, அவங்களைத் தங்களோட வலையில வீழ்த்தி லாபம் அடையத் துடிக்கிறவங்க இவங்கதான். பாவம், ஏமாந்த பொம்பளைங்க இந்தப் பசுத்தோல் போர்த்தின புலிங்க கிட்டேயும் ஏமாந்து நிக்கிறாங்க. நித்தியானந்தனெல்லாம் இந்தப் பசுத்தோல் போர்த்தின புலிக்கூட்டத்துல ஒருத்தன்தான். அவனை மாதிரி போலி ஆசாமிகளையெல்லாம் டார் டாரா கிழிச்சு எழுதுங்க. இந்துச் சாமிகளை விட்டுருங்க.

பெண்கள் உரிமை விஷயத்துல முஸ்லிம் மதத்தைக் குறை சொல்லுறவங்க இருக்காங்க. உண்மையில, பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்குறது முஸ்லிம் மதம்தாங்க. அதனாலதான் புரட்சி எழுத்தாளரா இருந்த கமலா சுரையா முஸ்லிமா மதம் மாறின பின்னாடி, ‘நான் இந்த மதத்துக்கு வந்த பின்னாடிதான் பாதுகாப்பா இருக்கேன். பர்தா அணியறது எனக்குப் பாதுகாப்புக் கவசமா இருக்கு’ன்னு பேட்டி கொடுத்தாங்க.

\\யார் யாரைக் காப்பாற்றுவது? யார் யாருக்காக வக்காலத்து வாங்குவது? சர்வசக்திக்கு நீங்கள் பாதுகாப்பு தரத் துடிக்கிறீர்களா?
“அவன் தாயை அவன் நிர்வாணமாக வரைந்து கொள்ளட்டும், என் தாயை அப்படி வரையக்கூடாது” என்று சொல்பவர்கள் எந்தத் தாயை தங்கள் தாயென்று கூறுகிறார்கள்? பராசக்தியையா? அவள் என்ன உன் பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்படும் தாயா நீ பிரத்யேக உரிமை கொண்டாட? லோகமாதா என்று ஏன் அழைக்கப்படுகிறாள்? எல்லார்க்கும் அவள் தாய் என்றால் எல்லாருக்கும் அவள் மீது உரிமை இல்லையா? உனக்கு மட்டுமே தாய் என்றால் அவள் எப்படி உலகத்துக்கே தெய்வமாகிறாள்? உலகில் இத்தனை சத விகிதத்திற்கு மட்டும் அவள் தாயென்றால் மீதிக்கு யார்? உன் தெய்வத்தின் சக்தியை நீயே இவ்வளவு குறுக்குவதை உணர்கிறாயா?//

நல்லாத்தாங்க இருக்கு இந்தக் கேள்விங்க எல்லாம்! சர்வ சக்திக்கு நாம பாதுகாப்பு தர முடியாதுதாங்க. பிரச்னை அங்கே இல்லீங்கய்யா. நான் தெய்வமா வழிபடற ஒரு தெய்வத்தைக் கேவலப்படுத்தி வரைஞ்சா என் மனசு புண்படுது இல்லீங்களா? என் மனசைப் புண்படுத்த உங்களுக்கு என்ன ரைட்டு? நான்னா நான் இல்லீங்க. என்னைப் போல பல லட்சக்கணக்கான பக்தர்களைச் சொல்றேன். உங்க மத்த கேள்விங்களுக்குச் சொல்றேன்... எந்தத் தாயை அப்படிக் கேவலப்படுத்தி வரைஞ்சாலும் தப்பு தப்புதான். உங்க தாய், எங்க தாய்னு எந்த வித்தியாசமும் இல்லே. கோபத்துல ஒரு பேச்சுப் பேசுறதுதான். அதையே புடிச்சுக்கிட்டா எப்படி?

‘அடுத்த மதத்தை விமர்சனம் செய்யாதே! அடுத்த மதத்தின் கொள்கைகளைக் குற்றம் சொல்லாதே! உன் மதத்தின் பெருமைகளைச் சொல். அடுத்த மதத்தை விமர்சிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை’ன்னு குரான் சொல்லுது. ‘அல்லா’ படத்தைக் கேவலமாகூட வேணாம், கண்ணியமாதான் வரையறேன்னு ஒருத்தன் வரைஞ்சாலும் அது தப்புதான். அது முஸ்லிம் மதத்தோட நம்பிக்கை. அதைத் தப்பு சொல்ல முடியாது. ஹுசேனே அல்லாவை வரைஞ்சாலும் தப்புதான். ஆனா, வரைவாரா? மாட்டார் இல்லியா? ஏன், அவங்க மதத்தின் கொள்கைக்கு மதிப்புக் கொடுக்குறார். நல்லது. ஆனா, இந்து மதச் சாமிங்கன்னா அவருக்கு ஏனுங்கய்யா இந்த வக்கிர புத்தி! நீங்க எல்லாம் இருக்கீங்கன்ற தைரியம்தான்!

ஹூசேன் தாத்தா இந்துச் சாமிகளை இப்படி நிர்வாணமா வரையறதை பெரும்பாலான இஸ்லாமியப் பெரியவங்களே விரும்பலீங்கன்றதுதான் நிஜம். நாம எப்படி நித்தியானந்தக் கோமாளிகளை இந்துச் சாமியார்னு சொல்லிக்க வெக்கப்படறமோ அப்படித்தான் இந்த ஹுசேன் ஏன் இப்படிப் பண்ணுறார்னு பெரும்பாலான உண்மையான முஸ்லிம்கள் வருத்தப்பட்டுக்கிட்டு இருக்காங்க. உங்களை மாதிரி ‘நடுநிலைமைவாதிங்க’தான் வக்காலத்து வாங்கிட்டு இருக்கீங்க.

கீழே ஹுசேன் தாத்தா வரைஞ்ச சில படங்களைக் கொடுத்திருக்கேன். ருத்ரன் ஐயா, நீங்களே பார்த்து ஒரு முடிவுக்கு வாங்க!

பக்கத்துல இருக்கிற படத்தை வரைஞ்சது ஹுசேன்தான். அதுக்கு அவர் கொடுத்திருக்கிற தலைப்பு ‘இந்தியக் கற்பழிப்பு’ (Rape of India). கேட்டா, ‘மும்பை தீவிரவாதம்’ எழுப்பின கோபத்தை இப்படி வெளிப்படுத்தினதா சொல்றாரு. சரி, இதே மாதிரி அரபு நாடுகள்லேயோ, இப்ப அவர் அடைக்கலமாகியிருக்கிற ‘கட்டார்’லேயோ நடந்தா Rape of UAE-னோ அல்லது Rape of Qutar-னோ தலைப்புக் கொடுத்துப் படம் வரைவாரா?

ஹுசேன் வரைஞ்ச துர்க்கையம்மன் படம்தான் இடப் பக்கத்துல இருக்கு. இரண்டாவதா இருக்கிறது அவர் வரைஞ்ச கடவுள் லக்ஷ்மி. அதுவே, நபிகளாரின் திருமகள், அன்னையர் திலகம் பாத்திமாவை எவ்வளவு கண்ணியமா வரைஞ்சிருக்கார் பாருங்க (வலது ஓரம் உள்ள படம்).
இடப் பக்கம் உள்ளது ராஜா ரவிவர்மா வரைஞ்ச சரஸ்வதி; பக்கத்துல இருக்கிற நிர்வாண சரஸ்வதி, ஹுசேன் வரைஞ்சது.

இப்பப் புரியுதுங்களாய்யா ஹுசேன் தாத்தாவோட வக்கிர புத்தி? மாதுரி தீட்சித், ஜூஹி சாவ்லா, ஐஸ்வர்யா ராய்னு கிழ வயசுலயும் கூசாம ஜொள்ளு விட்டவர்தானே அவரு? அது அவரோட பர்சனல் விஷயம். நாம கேக்க முடியாது. ஆனா, திரும்பத் திரும்ப ஏன் இந்துக் கடவுள்களையே இப்படிக் கேவலப்படுத்தி ஓவியங்கள் வரையணும்னுதான் கேக்கறேன். இதனால இந்துச் சாமிகளோட மகிமை ஒண்ணும் குறைஞ்சுடப் போறதில்லே; ஆனா, அந்தத் தெய்வங்களையெல்லாம் மனசாரக் கும்புடற எங்களை மாதிரி பக்தர்கள் மனசை ஏன் நோகடிக்கிறீங்கன்னுதான் கேக்குறேன்.

முதல் தடவை ஹுசேன் இப்படி இந்துக் கடவுளை நிர்வாணமா வரைஞ்சப்போ, உண்மையிலேயே அதை ‘கலை’ நோக்குல அவர் வரைஞ்சிருக்கலாம். ஆனா, எப்போ பக்தர்கள் கோபப்பட்டுக் கொந்தளிச்சு, அவர் கலைக்கூடத்தை அடிச்சு, உடைச்சு நொறுக்கினாங்களோ, (அந்த வன்முறையை நான் நியாயப்படுத்தலே. மகா அக்கிரமம்தான் அது!) அப்பவே, ‘சரி, இப்படி வரையறது இந்து மதத்தில் உள்ள பக்தர்கள் மனசைப் புண்படுத்துது போலிருக்கு’ன்னு அவர் அப்படி வரையறதை விட்டிருக்கணுமா இல்லியா? அதானேங்க ஒரு பெரிய மனுஷனுக்கு அழகு! அப்படி விட்டிருந்தார்னா, நான்கூட, ‘பாவங்க! ஏதோ இயற்கையா வரையணும்கிற ஆசையில ஹுசேன் தாத்தா அப்படி வரைஞ்சுட்டாரு. அந்தப் படம் பக்தர்களை இந்த அளவுக்கு வேதனைப்படுத்தும்னு அவருக்குத் தெரியாது, பாவம்! அதுக்கு இந்தப் படுபாவிப் பசங்க அவர் மேல இப்படிக் காட்டுத்தனமா பாய்ஞ்சி, அடிச்சு நொறுக்கியிருக்காங்களே! சே... கொஞ்சம்கூட சகிப்புத் தன்மையே இல்லே!’ன்னு பதிவு எழுதியிருப்பேன்.

ஆனா, நடந்தது என்ன? ‘போங்கடா பொங்கிங்களா... நான் அப்படித்தான் வரைவேன். நீங்க வருத்தப்பட்டா எனக்கென்ன, வேதனைப்பட்டா எனக்கென்ன? என் படத்தை கோடி ரூபாய் கொடுத்து வாங்கிப் போய் வீட்டுல மாட்டி வெச்சுக்க எனக்கு ஆள் இருக்கு’ன்னு ஒரு அழும்புலதானே அவர் திரும்பத் திரும்ப இப்படியே வக்கிரமா வரைஞ்சுக்கிட்டிருக்காரு?

நித்தியானந்தனைக் கண்டிச்ச நீங்க ஹுசேனையும் கண்டிச்சிருந்தீங்கன்னா, உங்களை நடுநிலைமையாளர்னு நான் ஒப்புக்கிட்டிருப்பேன். நீங்க அப்படி இல்லேங்கிறதுதான் வருத்தமா இருக்குங்கய்யா!

என் மனசுல பட்டதைச் சொல்லிட்டேன். இதனால உங்க மேல உள்ள மதிப்பும் மரியாதையும் எனக்குக் கொறைஞ்சுடுச்சுன்னு அர்த்தப்படுத்திக்காதீங்க!

வணக்கம்.

பணிவுடன்,

கிருபாநந்தினி.
,
Author: கிருபாநந்தினி
•Wednesday, March 03, 2010
ணக்கமுங்க! எல்லாரும் நல்லாருக்கீங்களா? மத்தவங்களோட வலைப்பூவெல்லாம் படிக்கிறீங்களா? மறக்காம பின்னூட்டம் போடறீங்களா? சந்தோஷமுங்க.

கருத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம்னு ஒரு பக்கம் பெரிய மனுசங்க சில பேர் அனத்திக்கிட்டு இருக்காங்க. கனி பொண்ணும் கார்த்தி புள்ளையும்கூட ‘கருத்து’ன்னு ஒரு அமைப்பு ஏற்படுத்தி, அது இப்ப எந்த நிலைமையில இருக்குன்னு தெரியல. ஆனா, மனசுல உள்ள கருத்த வெளிய சொல்றதுக்கு இந்த நாட்டுல இன்னும் சுதந்திரம் வரலேன்னுதான் எனக்குத் தோணுது. அதுலயும் என்னைப் போல பொண்ணாப் பொறந்தவ கருத்தே சொல்லக் கூடாதுன்னு ஒரு கோஷ்டியே வேட்டிய மடிச்சுக் கட்டிக்கிட்டுத் திரிஞ்சுக்கிட்டிருக்குன்னு சமீபத்துலதான் தெரிஞ்சுக்கிட்டேன். மீறி கருத்து சொன்னா, அவ ஜாதியிலேர்ந்து, அப்பன் ஆத்தா வரைக்கும் சந்தியில இழுத்து வெச்சு, நாராச வார்த்தையால நாறடிக்கக் காத்துக்கிட்டிருக்கு.

புள்ளைய கவனி, புருசனுக்கு ஆக்கிப்போடுன்னு வந்த ஆணாதிக்கப் பின்னூட்டங்கள்கூடப் பரவாயில்லை. ஆபாசமா, வக்கிரமா வந்த பின்னூட்டங்களைக் கண்டுதான் வருத்தமா இருக்கு. இப்படி வருத்தமா இருக்குன்னு போன பதிவுக்கான பின்னூட்டத்திலேயே நான் சொல்லியிருந்ததைப் பார்த்துக் குஷியாகி, ‘ஆஹா! இவ வருத்தப்படுறாடோய்! இன்னும் இன்னும் எழுதி இவ மனசை நோகடிப்போம்!’னு கெளம்பிட்டாய்ங்க.

ஆனா, நான் வருத்தப்பட்டது அவங்க ஆபாசமா எழுதினதுக்காக இல்லே. பெண்ணோட பாலியல் உறுப்புகளின் பெயர்களையே ஆபாச ஆயுதங்களா நினைச்சு உபயோகப்படுத்தியிருக்காங்களே, அவங்க இந்த உலகத்துக்கு ‘வந்த வழி’யும் அதுதான்கிறதை மறந்துட்டாங்களேங்கிற வருத்தம்தான் எனக்கு!

‘ரதி’ என் பதிவைக் கண்டிச்சுப் பின்னூட்டம் போட்டிருந்தாலும், அதுல ஒரு கண்ணியம் இருந்தது. தவிர, தமிழ்நதியோட ‘இளவேனில்’ வலைப்பூவுல அவங்க, ‘கிருபாநந்தினிக்கு வந்த தனி நபர் தாக்குதல் பின்னூட்டங்களைப் பற்றி நீங்க கண்டிக்காதது ஏன்?’னு கேட்டிருந்தாங்க. கூடவே, “அவர் ஒர் விடயத்தை அறியாமல்,ஆராயாமல் எழுதுகிறாரா இல்லையா என்பதை சொல்வதிலிருந்து விலகி, அவர் என்ன எழுதுவது என்பதை தீர்மானிக்க இவர்கள் யார்?”னும் கேட்டிருந்தாங்க. அது மனசுக்கு ஆறுதலா இருந்தது. ரதிக்கு என் நன்றியைத் தெரிவிச்சுக்கறேன்.

ரதிக்கு பதில் தெரிவிச்சிருக்கும் தமிழ்நதி, “ஆம். குறிப்பிட்டிருக்க வேண்டும். மிக மனவேதனையுடன் அந்தப் பதிவை நான் எழுதினேன். அப்போது கிருபாநந்தினியை அப்படிச் சாடி எழுதியிருந்ததைப் பற்றி நான் குறிப்பிட மறந்துவிட்டேன். ஒருவேளை அப்படிச் சாடி எழுதியிருந்தது 'எனக்குச் சார்பாகப் பேசியிருக்கிறார்கள்' என்ற உள்ளார்ந்த திருப்தியை எனக்கு அளித்திருந்ததனால் சுலபமாக மறந்துவிட்டேன் போலும். மனித மனத்தின் விசித்திரத்தை யார்தான் புரிந்துகொள்வது? தவறுக்கு மன்னிக்கவும். பெண் என்றால், சமையல், அழகுக்குறிப்பு, பிள்ளை வளர்ப்பு போன்ற விடயங்கள் மனதுள் படிந்துபோய்விட்டிருக்கின்றன. இது அகல நூற்றாண்டுகள் ஆகும்”னு உண்மையை வெளிப்படையா ஒப்புக்கிட்டு எழுதியிருக்காங்க. இதுக்கு ரொம்ப மனத் துணிவும் நேர்மையும் வேணும். தமிழ்நதிக்கு என் நன்றி!

எனக்கு ரொம்பப் பிடிச்ச மொழி தமிழ். தெரிஞ்ச மொழியும் அது ஒண்ணுதான். ‘படித்துறை’ங்கிறது நதிக் கரையில் இருப்பது; நதிக்கரையில் ஒன்று சேர்ந்தவர்கள் கலகலப்பாகக் கூடிப் பேசுகிற இடம். ‘தமிழ்நதி’ பேர்ல எனக்கு எந்தத் தனி நபர் கோபமும் இல்லை; காழ்ப்பு உணர்ச்சியும் இல்லை. ‘டமில்ரிவர்’னு அவங்க பெயரை ஆங்கிலப்படுத்தியதில் வன்மமோ, குரூர உணர்வோ இல்லை. அது சும்மா ஒரு நையாண்டிதான்!

ஓ.கே.! பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்!

***

நித்யானந்தரின் திருவிளையாடல்களை, ‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’கிற நோக்கோடு சன் நியூஸ் ராவும் பகலுமா ஒளிபரப்பி மகிழ்ந்தது. நாமெல்லாம் ‘மிட்நைட் மசாலா’ போல பார்த்து மகிழ்ந்தோம்.

அரசியல்வாதி, போலீஸ் அதிகாரி, டாக்டர், வாத்தியார், கவர்னர், அர்ச்சகர், பாதிரியார், இந்துச் சாமியார்னு எந்த வேறுபாடுமே இல்லாம இந்த மாதிரி காம லீலைகள்ல மூழ்கித் திளைக்கிறதை அப்பப்போ தமிழ்ப் பத்திரிகைங்களும், தொலைக்காட்சிகளும் படம் பிடிச்சுக் காட்டிக்கிட்டு வருதுங்க. அவங்க நோக்கம் என்னவோ மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துறதா இருக்கலாம். ஆனா, எனக்கு என்ன பயம்னா, இதையெல்லாம் அடிக்கடி ஒளிபரப்பி, அதுல ஒரு டேஸ்ட் ஏற்பட்டு, “என்னப்பா, இன்னிக்கு எதுவும் புதுசா யாரோட லீலையும் இல்லையா? அட போப்பா! போரடிக்குதே! அந்த கவர்னர் கேஸட்டையாவது மறு ஒளிபரப்புச் செய்யலாம்ல?”னு சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிக்குக் கடிதம் எழுதுற அளவுக்கு ஜனங்க ஆளாயிடப் போறாங்களேங்கிறதுதான். போகிற போக்கைப் பார்த்தா, “தூத்துக்குடி வேல்முருகன், ராமகிருஷ்ணன், திண்டிவனம் இரா.சுப்பையா, செங்கல்பட்டு ராஜேஷ், சக்திவேல், செய்யாறு சுப்பிரமணி, மாணிக்கம் ஆகியோர் விரும்பிக் கேட்டுள்ளார்கள்...’னு நேயர் விருப்பமாவே இந்த காம கேஸட்டுங்களை ஒரு நிகழ்ச்சி நிரலாவே ஆக்கிடுவாங்க போலிருக்கு.

நித்யானந்தர் குமுதத்துல முன்னே ‘ஜன்னலைத் திற; காற்று வரட்டும்’னு எழுதினாரு; இப்ப, ‘ஆத்மாவைத் திற; ஆனந்தம் பெருகட்டும்’னு எழுதிக்கிட்டு வர்றாரு. குமுதம்காரங்க இதைத் தொடருவாங்களா, நிப்பாட்டிடுவாங்களான்னு தெரியலை. ஆனா, அவங்களுக்கு என்கிட்டே ஒரு அருமையான யோசனை இருக்கு. அது குமுதம் பத்திரிகைக்கேத்த யோசனைதான். இதே நித்யானந்தரை விட்டு, அடுத்த இதழ்லேர்ந்து ‘கதவைத் திற; நடிகை வரட்டும்’னு ஒரு ஜிலுஜிலு கட்டுரைத் தொடரை ஆரம்பிச்சுடலாம். ‘ஒரு நடிகையின் கதை’ வெளியானப்போ இத்தனை ஆயிரம் பிரதிகள் சர்க்குலேஷன் ஏறிச்சுன்னு சந்தோஷப்பட்டுக்கிட்டவங்கதானே! இப்ப இந்த யோசனையால முன்னைவிட டபுள் மடங்கு சர்க்குலேஷன் எகிறும். அதுக்கு நான் கியாரண்ட்டி!

சமீபத்துல நித்யானந்தர் இப்படி எழுதியிருந்தாரு... ‘நிஜமான ஒரு யோகியால்தான் தன்னைத்தானே கட்டுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி வெற்றி பெறுவதெல்லாம் சாத்தியம். சரியான நுட்பம் தெரியாமல் புலன்களைச் சாதாரண மனிதர்கள் அடக்க முயற்சிப்பது பல நேரங்களில் தோல்வியில்தான் முடிவடைந்துவிடுகிறது.’

சரியாத்தான் சொல்லியிருக்காரு. நித்யானந்தர் நிஜமான யோகி இல்லை. சாதாரண மனிதர்தான். அதனாலதான் அவர் புலன்களை அடக்க முயற்சி பண்ணவே இல்லை. எல்லாம் சரி. கூடவே, அவர் சாமியார் வேஷம் போட்டு ஊரை ஏமாத்துறதையும் இத்தோடு நிப்பாட்டிக்கிட்டார்னா அவருக்கும் நல்லது; அடுத்தவங்களுக்கும் நல்லது. அடுத்த வாரம் ஞாநி ஐயா, நியாயவானா இருந்தா, இந்த நித்யானந்தருக்கு ஒரு குட்டு வைக்கணும். அப்படி வெச்சா, ஞாநிக்கு நான் பூச்செண்டு தரேன்.

சாமியார்கள் சபலத்துக்கு ஆளாவது புராண காலத்துலேர்ந்து இருக்குற விஷயம்தான். அதனாலதானே முனிவர்களின் யாகத்தைக் கெடுக்க இந்திரன் தன் கிட்டே இருக்குற ரம்பை, ஊர்வசிகளை அவங்க முன்னே போய் டான்ஸ் ஆடுன்னு அனுப்பி வெச்சான்!

மைக்கேல் ஜாக்ஸனோட நிகழ்ச்சியில, அவர் மேல எத்தனைப் பெண்கள் பைத்தியமா, வெறியா இருந்தாங்கன்னு ஒரு இசை நிகழ்ச்சியின்போது தெரிஞ்சுது. ஹாலிவுட் வரைக்கும் போவானேன்... நம்ம எம்.கே.டி. பாகவதர் காலத்துல, அவர் பொது இடத்துக்கு வந்தார்னா, அவர் மேல எத்தனைப் பொம்பளைங்க விழுந்து பிறாண்டினாங்கன்னு அந்தக் காலத்து ஆளுங்களைக் கேட்டா, ரசனையா விலாவாரியா சொல்வாங்க.

கிருஷ்ணப்ரேமின்னு ஒருத்தர்... கர்நாடக சங்கீதம் பாடி, உபந்நியாசம் பண்றவர். செய்யுறது பக்திமயமான தொழில். ஆனா, உபந்நியாசம் பண்றப்பவும் அவர் பார்வை பெண்கள் பக்கம்தான் மேயும். நான் சொல்றது அம்பது, அறுபது வருஷத்துக்கு முன்னாடி! இப்பத்தான் பெண்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமா அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாம் போய் தறிகெட்டு அலையுறாங்கன்னு நெனைச்சிட்டிருக்கோம். அதான் இல்லே. அந்தக் காலத்திலேயே நிறையப் பெண்களுக்கு லஜ்ஜைங்கிறது போயிடுச்சு. கிருஷ்ணப்ரேமியோட பார்வை தன் மேல படாதான்னு ஒவ்வொரு பெண்ணும் ஏங்கினாங்க. அந்த கிருஷ்ணப்ரேமி தன்னையே கிருஷ்ணனாவும், மத்த பெண்களையெல்லாம் கோபிகைகளாவும் நினைச்சுக்குவார். பெண்களும் அப்படியே நினைச்சுக்கிட்டு, கிருஷ்ணப்ரேமியைப் பார்த்ததும், ‘கிருஷ்ணா... கிருஷ்ணா... என்னையும் உன்னோட அழைச்சுக்கிட்டுப் போயிடுடா!’ன்னு ஜுர வேகத்துல அனத்துறது மாதிரி அனத்துவாங்களாம். அவர் ஒரு ஊருக்குள்ள வந்தார்னா, அவர் பார்வைல படாத மாதிரி தன்னோட பெண்டாட்டியைப் பாதுகாக்கிறது ஒவ்வொரு புருஷனுக்கும் பெரும்பாடா ஆயிடுமாம். இதையெல்லாம் என் தாத்தா கதை கதையா சொல்லுவார்.

அப்பெல்லாம் இத்தனை காண்டிட் காமிராக்கள் இல்லை; தொலைக்காட்சிகள் இல்லை. இருந்திருந்தா, அந்தக் காலத்துக்கு இந்தக் காலம் எத்தனையோ மேல்; முன்னைவிட ஒழுக்கம் அதிகமாவே வளர்ந்திருக்குன்னுதான் சொல்லத் தோணும்! ‘காலம் கெட்டுப் போச்சு... காலம் கெட்டுப் போச்சு’ன்னு இனியும் பெரியவங்க சொன்னா, நம்புறதுக்கு நாங்க தயாரா இல்லை.
.
Author: கிருபாநந்தினி
•Thursday, February 11, 2010
கொஞ்ச நாளா எதுவும் எழுதலை. காரணம், சார் (என் கணவர் கிருபாதான்!) ஊர்ல இல்லை. டெல்லி போயிருக்கார். இரண்டு மாச கேம்ப். அதனால எதுவும் எழுதத் தோணலை. அவர் இருந்தா ஏதாவது பேச்சுக் கொடுத்துக்கிட்டிருப்பார். இதை எழுதலாமே, அதை எழுதலாமேன்னு ஐடியா கொடுப்பார். எழுதினதைப் படிச்சுட்டுப் பாராட்டுவார். தப்பு இருந்தா திருத்துவார். எனக்கும் எழுதுறதுல ஒரு உற்சாகம் இருக்கும். தவிர, புஜ்ஜிம்மா (என் செல்ல வாரிசு) படுத்தல் அதிகமாயிடுச்சு. சதா நை... நை...ன்னு அழுதுட்டேயிருக்கா! (நைனா, நைனான்னு அழுவுறாளோ?!)

சரி, அதிருக்கட்டும்..! என்னை இப்ப எழுத வெச்சதே ‘டமில் ரிவர்’ அக்காதான். அதாங்க, தமிழ்நதி அக்கா! ‘படுத்தாதீங்க தமிழ்நதி’ன்னு நான் போட்டிருந்த பதிவுக்கு ஏற்கெனவே கடுப்பாகி அவங்க ஒரு பின்னூட்டம் இட்டுட்டாங்க. அதுக்கு நான் பதிலும் போட்டுட்டேன். அப்புறமும் அவங்க மனசு குமுறிக்கிட்டே இருந்திருக்குபோல! பிப்ரவரி 6-ம் தேதி நீள நீளமா மூணு பின்னூட்டம் இட்டிருக்காங்க.

டமில் ரிவர் அக்காவுக்கு என்னோட தேங்க்ஸ்! ஏன்னா, அக்கா பெரிய எழுத்தாளி. கவிதாயினி. அவங்க எழுதினா, வெக்கங்கெட்ட குமுதமும் ஆனந்தவிகடனும் அவங்க எழுத்தைப் பிரசுரிக்கக் காத்திருக்கு. என் எழுத்தை யாரு சீண்டுவாங்க? 110 கோடிப் பேரில் நான் ஒரு சுண்டைக்காய்! ம்ஹும்... சித்தெறும்பு. சித்தெறும்புகூடக் கிடையாது. எறும்பின் வாய் உணவு! அப்படியிருந்தும் என்னை ஒரு பொருட்டா மதிச்சுப் பின்னூட்டம் இட்டிருக்காங்கன்னா, என் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்கன்னுதானே அர்த்தம்! அதுக்குதான் தேங்க்ஸ்!

அவங்களும் ‘ரதி’யக்காவும் கொதிச்செழுந்து தண்டி தண்டியா பின்னூட்டம் இட்டதுல, நான் என் விளக்கத்தைச் சொல்லாம விட்டா, அவங்களை அலட்சியப்படுத்தறேன்னு ஆயிடுமேன்னு பயந்துதான் ரொம்ப யோசனைக்குப் பிறகு இப்ப இதை எழுதறேன். தன்னிலை விளக்கம்னு வெச்சுக்கோங்களேன்.

முதல்ல ‘ரதி’யக்காவோட பின்னூட்ட வரிகளைப் பார்ப்போம்.

ஜனவரி 23: \\காலத்தே செய்யும் உதவி ஞாலத்தில் பெரிது என்பார்களே. இனிமேல் நீங்கள் புத்தகம் விற்றாலும், உங்கள் தளங்களில் எங்களுக்காய் பதிவு தான் போட்டாலும் எங்கள் ஐம்பதாயிரம் அப்பாவி உயிர்கள் மீண்டு வரப்போவதில்லை. எப்படியோ போங்கள்.//

என் பதிவுல அப்பாவி ஈழத் தமிழர்கள் படுகொலையானதை நான் கேலியோ கிண்டலோ பண்ணியிருக்கிற மாதிரி ஏன் இந்தக் கோபம்? அவர்களைக் காக்க வேண்டியது மத்திய, மாநில அரசாங்கங்களின் கடமை. தமிழ்நாட்டு மக்கள் மனிதச் சங்கிலி நடத்தி எதிர்ப்புத் தெரிவிச்சாங்க. அவங்க வேறென்ன செய்ய முடியும்? பத்திரிகைகள் ஈழப் படுகொலையைப் பத்திப் பக்கம் பக்கமா எழுதின. அவங்களும் வேறென்ன செய்ய முடியும்? அதைக் காசு பார்க்கும் கயமைத்தனம்னு சொல்றது அயோக்கியத்தனம்! தமிழ்நாட்டு மக்களுக்கு, தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ஈழச் சகோதரர்கள் மீதுள்ள ஈர உணர்வைக் கொச்சைப்படுத்துற மாதிரி இருக்கு. அந்தக் கோபத்தைதான் நான் என் வலைப் பதிவுல வெளிப்படுத்தினேன்.

ஜனவரி 25: \\ராஜீவ் கொலைங்கிற கொடுமையைத் தாண்டியும்...// அதெப்படிங்க உங்களைப்போன்ற சில இந்தியர்களால் கொஞ்சம் கூட கூசாமல் இப்படி பேசமுடிகிறது? அமைதிப்படை என்ற பெயரில் வந்து எங்களை கொடுமைப்படுத்தினீர்கள், கற்பழித்தீர்கள், ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்தீர்கள்.//

திருத்தம். என்னைப் போன்ற சில இந்தியர்களால் அல்ல; பல கோடி இந்தியர்களால்! எங்கிருந்தோ வருவீங்க; எங்க பிரதமரை (அந்தச் சமயம் பிரதமராக இல்லாவிட்டாலும்) எங்கள் மண்ணிலேயே கொன்று குவிப்பீங்க. இந்தச் செயலுக்கு நீங்க கூசமாட்டீங்க. பின்னாடி ‘துன்பியல்’ ’துடைப்பைக்கட்டை இயல்’னு புதுசா ஒரு வார்த்தையைக் கண்டுபிடிச்சு நீலிக் கண்ணீர் வடிப்பீங்க. அதை நாங்க கண்டுக்காம சகிச்சுக்கிட்டிருக்கணுமா? அமைதிப் படை வேணும்பீங்க. அப்புறம், ‘வேணாம்; இது எங்க நாட்டுப் பிரச்னை. இதுல இந்தியா போன்ற அந்நிய நாடு தலையிட வேணாம்’பீங்க. உங்களுக்குத் தேவைன்னா தமிழ்நாடு தொப்புள்கொடி உறவு; வேண்டான்னா அங்கே நடப்பது ‘சகோதர யுத்தம்’ ஆயிடும்; சிங்களவர்கள் சோதரர்கள் ஆகிடுவாங்க. தமிழ்நாடு அந்நிய தேசமாயிடும். அப்படியா? அப்பாவி ஈழத் தமிழர்களைப் பகடைக்காயாக்கி, யுத்தம் பண்ணி, தப்புக்கு மேல தப்பு பண்ணி, இன்னிக்கு அவங்களை இந்தக் கதிக்கு ஆளாக்கிட்டுப் பழியை மாத்திரம் ஏன் அடுத்தவங்க மேல தூக்கிப் போடுறீங்க?

\\தமிழ்நாட்டு பத்திரிகைகளுக்கு தம் இனம் என்ற ரீதியில் ஓர் கடப்பாடும் உண்டு. அப்படி அவர்கள் அதை செய்திராவிட்டால் தான் அவமானம். அது தவிர இந்தியாவிற்கும் தமிழ்நாட்டு அரசிற்கும் இதில் பங்கு உண்டு என்கிற கவலையில் அதை சுட்டிக்காட்டும் தார்மீக கடமை தமிழ்நாட்டு பத்திரிகைகளுக்கு உண்டு என்பதால் எழுதினார்கள்.//

உண்மைதான்! அந்த தார்மிகக் கடமையில்தான் தமிழ்ப் பத்திரிகைங்க ஈழத்து மக்களின் வலிகளையும் வேதனைகளையும் பக்கம் பக்கமா எழுதித் தள்ளின. அதுக்குக் கிடைச்ச பரிசுதாங்க ‘காசு பார்க்கும் கயமைத்தனம்’கிற அபவாதப் பேச்சு! அதையும் தமிழ்நாட்டுல மிகப் பிரபல தமிழ்ப் பத்திரிகையான ‘குமுதம்’தான் வெளியிட வேண்டியிருக்கு. ஏன், டமில் ரிவரக்கா கனடாவிலோ, மலேசிய முரசிலோ போய் எழுத வேண்டியதுதானே? \\அப்படி அவர்கள் அதை செய்திராவிட்டால்தான் அவமானம்.// செய்ததுக்கும்தான் அவமானக் கரியை அள்ளிப் பூசிட்டீங்களே! ஈர இதயமுள்ள தமிழ்நாட்டுத் தமிழனின் அனுதாப உணர்வுகளைக் கொச்சைப் படுத்திப் பேசிட்டீங்களே? போதாதா?

\\நீரெல்லாம் எங்களுக்காக நேரத்தை வீணடிக்கவில்லை என்று எந்த அப்பாவி ஈழத்தமிழன் உம்மிடம் அழுதான்? //

ஈழத் தமிழருக்காக உண்மையிலேயே மனம் விட்டு அழுத, அவங்க நல்வாழ்வுக்காகத் தங்கள் உணர்வுகளை அழுத்தமாகப் பதித்த தமிழகத் தமிழனுக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்!

ஜனவரி 26: \\தமிழ்நதி குறித்த எழுத்துக்களிலும், ஷோபாசக்தியையெல்லாம் தேடி எடுத்து இணைத்த விதத்திலும் ஒரு வன்மம் இருக்கிறது சகோதரி! // இது செல்வேந்திரன் அண்ணாச்சியின் பின்னூட்டம்.

மன்னிக்கணும் அண்ணா! சத்தியமா ஷோபாசக்தி யார்னே எனக்குத் தெரியாது - அவரது வலைப் பதிவை இணைச்சப்போ! தமிழ்நதின்னு தேடினப்போ வந்து சிக்கினதுதான் அது. படிச்சேன். என் கருத்துக்களோடு ரொம்பவும் ஒத்துப் போகுற மாதிரி இருந்ததால, என் கட்டுரைக்கு வலிமை சேர்க்க அதை இணைச்சேன். மத்தபடி வன்மம்கிறதெல்லாம் பெரிய வார்த்தைங்ணா!

இனி, டமில் ரிவர் அக்காவோட பின்னூட்டங்களுக்கு வர்றேன்.

\\கேலி செய்யக்கூடாத விடயங்களும் உலகத்தில் இருக்கின்றன என்பதை உங்கள் நாட்டில் பேரழிவு வருங்காலம் நீங்களாகவே தெரிந்துகொள்வீர்கள்.//

டமில் ரிவர் அக்கா! சத்தியமா எனக்குப் புரியத்தான் இல்லை. என் பதிவில் எதைக் கேலி பண்ணினேன்? உங்கள் துயரங்களையா? இல்லையே! ஈழத்தில் நடந்து முடிந்த இனப் படுகொலை எங்கள் இதயங்களில் எத்தனை ஆழமான ரணத்தை ஏற்படுத்தியிருக்குன்னு உங்களுக்குத்தான் புரியலை. அதனாலதான் அதைக் காசு பார்க்கும் கயமைத்தனம்னு கொச்சைப்படுத்துறீங்க. இதைச் சொன்னா, உங்களுக்குக் கோபம் பொத்துக்கிட்டு வருது. விகடனுக்கும் குமுதத்துக்கும் உங்களுக்கும் சிண்டு முடியறேன்கிறீங்க. இவங்களை இல்லைன்னா பின்னே யாரைக் குறிப்பிடுறீங்கன்னு அந்தப் பத்திரிகைங்க பெயர்களை அந்த பேட்டியில் தெளிவாச் சொல்ல வேண்டியதுதானே அக்கா? அதை விட்டுட்டு சாபம் எல்லாம் எதுக்கு?

\\உங்களை நான் அறிந்ததில்லை. உங்கள் எழுத்தை நான் முன்பின் படித்ததுமில்லை. எதற்காக என்னை நீங்கள் வந்து தாக்குகிறீர்கள் என்பதும் எனக்குப் புரியவில்லை.//

அறிந்திருக்க முடியாதுதாங்க்கா. காரணம், நான் ஒண்ணும் உங்களைப் போல உலகம் அறிஞ்ச எழுத்தாளர் இல்லியே! ஒரு சாதாரண ஹவுஸ் வொய்ஃப்! இதுக்கும் பெண்ணியவாதிங்க என்னைக் கேலி பண்ணலாம். அதனால, ஹோம் மேக்கர்னு ஸ்டைலா வேணும்னா வெச்சுக்கோங்க. உங்களை நான் தாக்கவே இல்லை அக்கா! தமிழகப் பத்திரிகைங்களோட ஆத்மார்த்த உணர்வுகளை நீங்க காயப்படுத்தினதுதான் என்னை வருத்தப்பட வெச்சுது. அதன் விளைவுதான் அந்தப் பதிவு.

\\"அந்தச் செய்திகளையெல்லாம் புத்தகமா போட்டு விக்கிறதுகூட, தமிழ் மக்கள் மனசுல ஈழத்து மக்களின் வேதனைகளை அழுத்தமா பதிய வைக்கிற ஒரு முயற்சிதான்."

அப்பூடியா? பதியவைச்சு அப்புறம் என்ன நடக்கும்? ஈழத்தமிழர்களுக்கு அநியாயம் பண்ணின மத்திய, மாநில அரசாங்கங்களைப் போட்டுக் காச்சு காச்சுன்னு காய்ச்சி ஆட்சில இருந்து தூக்கிடுவீங்களா? சும்மா போங்க கிருபாநந்தினி.//

ஈழப் படுகொலை தொடர்பா உங்களுக்கு யாரையாவது திட்டணும்போல் இருந்தா, ஒண்ணே முக்காலரைக்கா மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தவரைத் திட்டுங்க; கை கட்டி வேடிக்கை பார்த்த மத்திய அரசைத் திட்டுங்க. பாவம், உங்க மேல கருணையோடு உள்ள உங்க தொப்புள் கொடி உறவான (இந்த வார்த்தைங்க எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்ததுதான்!) எங்களையும், எங்க பத்திரிகைங்களையும் திட்டாதீங்க.

\\ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் தனித் தனியான பின்னூட்டங்களின் வழி பதில் சொல்வதன் வழியாக உங்களை ஓரளவு அறிந்துகொண்டேன். மேலும் டாக்டர் ருத்ரன் போன்றவர்கள் வந்து பின்னூட்டும்போது 'ஐயகோ நீங்களா...?'என்று ஓவராகக் குதிப்பதைப் பார்த்ததும் மேலும் விளங்கியது.//

தனித் தனியா பதில் சொல்றதுதான் பண்பாடுன்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன் - ஒவ்வொருத்தருக்கும் நாமே நேரடியா போய் அழைப்பிதழ் வைக்கிற மாதிரி! அப்படி இல்லியா? சரி, விட்டுட்டா போச்சு! ஆனா, ‘உங்களை ஓரளவு அறிந்துகொண்டேன்’னு ஏன் குன்ஸா சொல்றீங்க? அப்படி என்னதான் அறிஞ்சுக்கிட்டீங்கன்னு உடைச்சே சொல்லியிருக்கலாமே அக்கா! ருத்ரன் பெரிய மனோதத்துவ மேதை. நான் சாமானியள். என் பதிவை அவர் படிச்சுப் பாராட்டிப் பின்னூட்டம் இட்ட சந்தோஷத்தில் ஓவரா குதிச்சுட்டேன்தான். அது ஒரு தப்பாக்கா? (உங்க பின்னூட்டம் வந்தப்பவும்கூட நான் குதிச்சேன்கிறதுதான் உண்மை.) அதுல உங்களுக்கு ‘மேலும் விளங்கியது’ என்னன்னுதான் இந்த மடைச்சிக்குப் புரியலை.

\\கவிதைப் புத்தகத்தில் அந்தப் படத்தைப் போட்டிருப்பது உண்மைதான். அதற்கான தகுதி எனக்கிருக்கிறது என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். //

உங்களுக்குத் தகுதி இருக்குன்னு நீங்களாவே நெனச்சுக்கிட்ட மாதிரி, தங்களுக்கும் தகுதி இருக்குன்னு தமிழ்ப் பத்திரிகைங்க நெனைச்சுக்கக் கூடாதா? மாமியார் உடைச்சா மண் குடம், மருமக உடைச்சா பொன்குடமா?

\\ஷோபா சக்தி கட்டுரைதான் உங்களுக்கு உவப்பாக இருந்ததா? ஒருவரைத் தூற்றவேண்டுமென்றால், உங்கள் சுயபலத்தில் நின்று தூற்றுங்கள். பக்கபலம், பின்பலம் தேடாதீர்கள்.//

இப்படிச் சொன்ன நீங்கதான்...

\\எனது நண்பர்களில் ஒருவர் எழுதிய கடிதத்தை எனது வலைப்பூவில் பிரசுரித்திருக்கிறேன். நேரம் இருக்கும்போது போய் வாசித்துப் பாருங்கள். //னும், \\நான் சொல்லவேண்டிய பலவற்றை ரதி பேசியிருப்பது ஆசுவாசம் அளிக்கிறது.//னும் பிறர் பலத்தைச் சார்ந்து நிக்கிறீங்க டமில் ரிவர்! மகா பெரிய எழுத்தாளினி-கம்-கவிதாயினியான நீங்களே பிறரைத் துணைக்கு அழைக்குறப்போ, ஈழத் தமிழர்களின் வலிகளை அறிந்த ஷோபா சக்தியை நான் துணைக்கு அழைக்கிறது மட்டும் உங்களுக்கு ஏங்க்கா கசக்குது?

இதே தேதியில், மூணாவதா டமில் ரிவர் இட்ட பின்னூட்டம் குப்பன் யாஹூக்கான மறுமொழி. அதுல நான் கருத்துச் சொல்ல விரும்பலை.

தமிழ்நதி அக்காவை ‘டமில் ரிவர்’னே கட்டுரை முழுக்கக் குறிப்பிட்டிருக்கேனேன்னு பாக்கறீங்களா? அக்கா அளவுக்கு எனக்குத் தமிழ் உணர்வு கொஞ்சமும் கிடையாதுங்க. அதான்!

(மறுபடி டமில் ரிவர் அக்கா படத்தை நெட்ல தேடப் போறேன். ஷோபா சக்தி மாதிரி வேற எந்தச் சக்தியும் வந்து சிக்கிறக்கூடாதுன்னு முப்புடாதியம்மனை வேண்டிக்கிறேன்!)

ஆஹா..! சிக்கிடுச்சுய்யா, சிக்கிடுச்சு! நான் ஒண்ணு தேடினா அதுவா வந்து விழுதே, நான் என்ன பண்ணுவேன்? இந்த வலைப்பூ யாருதுன்னு எனக்குத் தெரியலை. கண்ணுல பட்டுது. (அது சரி, என் கெரகம்... என் கண்ணுல படுறதெல்லாம் இப்படி அக்காவுக்கு எதிர்ப்பாவே இருக்கணுமா?) அதிலிருந்து சில வரிகளை காப்பி பண்ணிக் கீழே கொடுத்திருக்கேன்.

\\ஆனால் அவ்வாறு அரசியல் பார்வை கொண்டவர்களையும் தமிழ்நதி வசைபாடுகிறார். அந்த பதிவில் உள்ள சிலவரிகள் தமிழ்நதியின் அரசியல் பார்வை எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு உதாரணம். ‘‘விடுதலைப் போராட்டம் தோற்றுவிட்டதற்குக் காரணம் சகோதரப் படுகொலைகள் இல்லை; முஸ்லிம் சகோதரர்களை விரட்டியது இல்லை; அனுராதபுரத்தில் புகுந்து பொதுமக்களைக் கொன்றுபோட்டது இல்லை. இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கப் பிடிமானம், அன்புக் கணவர் ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பழிவாங்கியே தீருவேன் என்ற மேன்மைமிகு சோனியாவின் பிடிவாதம், இலங்கையின் பௌத்த சிங்களப் பேரினவாதம், சீனாவின் நானா நீயா போட்டி, ஈராக் போன்ற நாடுகளில் புஷ் விட்ட தவறுகளால் நல்லபிள்ளையாகக் கைகட்டிக்கொண்டிருக்க வேண்டிய அமெரிக்காவின் நிர்ப்பந்தம்… ” என்னும் தமிழ்நதியின் அப்பதிவிலுள்ள வரிகள். ஆக, தமிழ்நதிக்கு மேற்கண்ட புலிகள் இழைத்த கொடுமைகள் எல்லாம் ‘ஜஸ்ட் லைக் தட்’ நொட்டாங்கையால் தள்ளக்கூடிய விஷயங்கள். இப்போது புலிகள் வீழ்ந்துபோனதால்தான் இதுகுறித்தாவது தமிழ்நதி எழுதுகிறார். புலிகள் போரில் வென்றிருந்தால் சோணகத்துரோகிகள் என எம் மக்களைத் துரத்தத்தான் செய்வார்கள், மாற்று இயக்கங்களை, ஜனநாயகப் போராளிகளைக் கொன்றுதான் போடுவார்கள். ஆனால் தமிழ்நதி அதுகுறித்து ஒரு சொல்லும் எழுதமாட்டார். //

போதுங்க்கா... இந்த ஆட்டத்துக்கு இனி நான் வரலை!


.
Author: கிருபாநந்தினி
•Sunday, January 31, 2010
விருது கொடுத்து கௌரவிக்கிறது ஒரு வகை; விருது கொடுத்துக் கேலி பண்றது ஒரு வகை! ‘பசங்க’ படத்தை இயக்கிய பாண்டிராஜுக்குச் ‘சிறந்த குழந்தைகள் பட இயக்குநர்’ விருது கொடுத்தது அவரை கேலி பண்ற மாதிரின்னு போன பதிவுல எழுதியிருந்தேன்.

இந்தக் குடியரசு தினத்தையொட்டி நம்மாளுங்க 13 பேருக்கு ‘பத்ம’ விருது அறிவிச்சிருக்கு மத்திய அரசு. இதைப் பத்தி எனக்குத் தோணினதை எழுதப் போறேன். இது என் கருத்து. எனக்குச் சரின்னு பட்டதை எழுதியிருக்கேன். இதுவே சரியான கருத்தா இருக்கணும்கிற அவசியமில்லே!

‘காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது’ங்கிறாரு வள்ளுவரு.

‘காலந்தாழ்த்தித் தரும் விருது பெரிதெனினும்
கடுகினும் மாணச் சிறிது’ங்கிறேன் நான்.

பத்ம விருதுக் கமிட்டியில இருக்கிறவங்களுக்கு சுய புத்தியே கிடையாதோன்னு ஒவ்வொரு முறை பத்ம விருதுகள் அறிவிக்கும்போதும் நம்மளை யோசிக்க வெச்சுடறாங்க. விஞ்ஞானி வெங்கடராமனுக்கு பத்ம விபூஷண் கொடுத்திருக்காங்க. வேற ஒரு காரணமும் இல்லே; அவர் சமீபத்துல நோபல் பரிசு வாங்கிட்டாரில்லையா, அதான்!

தகுதியானவங்களுக்கு விருது கொடுத்து, அவங்களை மரியாதை செய்யுறது ஒரு வகை. விருது பெற்றவங்களுக்கே விருது கொடுத்து அந்த விருதுக்கே மரியாதையைத் தேடிக்கிறது இன்னொரு வகை. வெங்கடராமனுக்குக் கொடுத்த விருது இந்த ரெண்டாவது வகையைச் சேர்ந்ததுதான். அதே போலத்தான் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பத்ம பூஷண் கொடுத்ததும்.

உலகின் உச்சபட்ச விருதான ஆஸ்கரை ஒண்ணுக்கு ரெண்டா தட்டிக்கிட்டு வந்துட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். (போதாக்குறைக்கு ரெட்டை கிராமி விருது வேற! சரியான மச்சக்காரன்! எல்லாமே ரெட்டை ரெட்டையா வந்து கொட்டுது அவர் மடியில! இப்ப நெனைச்சிருப்பாங்க நம்மாளுங்க, அவருக்கு பாரத ரத்னாவே கொடுத்திருக்கலாம் போலிருக்கேன்னு!) அவருக்கு பத்ம பூஷணோ, விபூஷணோ கொடுக்கலைன்னு இங்கே யாரும் அழப்போறது இல்லை. அவரும் கேக்கப் போறது இல்லை. ஆனா, கொடுத்திருக்காங்கன்னா நெஜம்மாவே அவங்கவங்க தகுதியைப் பார்த்துதான் கொடுக்குறாங்களான்னு டவுட்டா இருக்கு. ஆஸ்கர் வென்ற நாயகனுக்கு நாமும் நம்ம சார்புல ஒரு விருது கொடுக்கலைன்னா நமக்கு மரியாதையா இருக்காதுன்னு நெனைச்சுக் கொடுத்தாப்பல இருக்கு. குட்டிக் குட்டிக் கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் எல்லாம் ‘நான் தரேன் டாக்டர் பட்டம், வாங்கிக்க... வாங்கிக்க...’னு கூப்பிட்டுக் கூப்பிட்டு சிலருக்கு விருது கொடுப்பாங்க பார்த்திருக்கீங்களா, அது அவங்களுக்குச் செய்யுற மரியாதை இல்லை. அவங்களுக்குக் கொடுக்கிறதன் மூலம் தனக்குத் தானே தேடிக்கிற மரியாதை! மத்திய அரசும் அந்த லிஸ்ட்ல வந்துட்டதுதான் வருத்தமா இருக்கு. (அப்படித்தான் மிகப் பெரிய இயக்குநர் சத்யஜித்ரேவுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது கிடைச்சவுடனே, நம்மாளுங்க ஓடோடிப் போய் அவர் கையிலே ‘பாரத ரத்னா’வைத் திணிச்சுட்டு வந்தாங்க. நாளைப்பின்ன யாரும் நாக்குல பல்லு போட்டுப் பேசிடக் கூடாது பாருங்க!)

சரி, ரஹ்மானுக்கு ஒரு பூஷண் கொடுத்தாச்சு! கூடவே, கொறையில்லாம இளையராஜாவுக்கும் கொடுத்தாச்சு! பின்னே, ரஹ்மானுக்குக் கொடுத்துட்டு இளையராஜாவுக்குக் கொடுக்கலையான்னு கேக்க தமிழ்நாட்டுல ஒரு கோஷ்டியே இருக்கே! அதனால அவருக்கும் ஒரு பூஷண் கொடுத்துடுவோம்னு கொடுத்தாப்லதான் இருக்கு இது. என்னைக் கேட்டா சிந்து பைரவி காலத்திலேயே ராஜாவுக்கு பத்ம விருது கொடுத்திருக்கணும். இப்ப ரஹ்மானோட சேர்த்துக் கொடுத்தா, தகுதியைப் பார்த்துக் கொடுத்த மாதிரியே தெரியலை. திட்டு வாங்கிக் கட்டிப்பானேன்னு கொடுத்த மாதிரிதான் இருக்கு.

சரி, இவருக்காவது எப்படியோ ஒரு விதத்துல பூசணியை, ஸாரி, பூஷணைக் கொடுத்துட்டாங்க. பாவம், எம்.எஸ்.வி. வாயில்லாப் பூச்சி! அவருக்காவும் வாய் விட்டுக் கேக்கத் தெரியாது; அவருக்காகக் குரல் கொடுக்கவும் இங்கே யாரையும் காணோம்! சரி விடுங்க, மகா இசை மேதையான அவருக்கு ஒரு விருது கொடுத்து தன்னைப் பெருமைப்படுத்திக்க மத்திய அரசுக்கு யோக்கியதை இல்லை. வேறென்ன சொல்றது?

‘மு.கருணாநிதியா, ஏ.கருணாநிதியா?’ன்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். ‘ஒரு தலைவன் இருக்கிறான்’னு எம்.ஜி.ஆர். பாடினது தன்னைத்தான்னு கூசாம சொல்லிக்கிட்டாரே முதல்வர் கருணாநிதி, அதைக் கிண்டல் பண்ணி எழுதினதுதான் அது. ஆனா, புரட்சித் தலைவியம்மா சும்மா விடுவாங்களா, ‘அம்மான்னா சும்மாவா?’ன்னு தலைப்புப் போட்டு ஒரு பதிவு எழுத என் கையைத் துறுதுறுக்க வெச்சுட்டாங்க.

‘திருவளர்ச் செல்வியோ, நான் தேடிய தலைவியோ?’ன்னு பாடினது என்னைத்தான்’னு திருவாய் மலர்ந்தருளியிருக்காங்க. எனக்கு நெஜம்மாவே புரியலீங்க, இவங்க ரெண்டு பேரும் பேசி வெச்சுக்கிட்டு நம்மளையெல்லாம் முட்டாளாக்குறாங்களா, இல்லே, சீரியஸாதான் இதையெல்லாம் சொல்றாங்களான்னு புரியவே இல்லே! யார் யாரோ எழுதின சினிமா பாட்டுக்கெல்லாமா இவ்ளோ முக்கியத்துவம் கொடுத்து முட்டி மோதுவாங்க?

சரி, அப்படின்னா நான் ஒரு பாட்டு சொல்றேன். அதையும் எம்.ஜி.ஆர். இந்தம்மாவைப் பார்த்துதான் பாடியிருக்காரு. அதையும் ஒத்துக்குறாங்களா?

‘என்னம்மா ராணி பொன்னான மேனி ஆலவட்டம் போட வந்ததோ?
ஏறி வந்த ஏணி தேவையில்லை என்று ஏழை பக்கம் சாடுகின்றதோ?
பட்டோடு பருத்தியைப் பின்னியெடுத்து
உங்க பகட்டுக்குப் புத்தாடை யார் கொடுத்தா?
கட்டாந்தரையிலே கல்லை உடைத்து
உங்க கண்ணாடி மாளிகையை யார் படைச்சா?’ன்னு அந்தக் கதாபாத்திரத்தை நினைச்சுப் பாடலே, ஜெயலலிதாவைத்தான் அப்படிக் குற்றம் சொல்லிப் பாடுறார் எம்.ஜி.ஆர்.னு எடுத்துக்கலாமா?

போங்கய்யா, போங்கம்மா... வேற வேலை வெட்டி இல்லே!

நான் பதிவெழுத வந்ததே இப்பக் கொஞ்ச நாளாதான்! ‘எனது ரசனை’ங்கிற வலைப்பூவுல ‘ரசிக்கும் சீமாட்டி’யம்மா ஒரு போட்டோவைக் கொடுத்து, அதுக்குத் தோதா ஒரு கமென்ட் எழுதச் சொல்லிக் கேட்டிருந்தாங்க. கீழே இருக்கு பாருங்க, அதான் அந்தப் படம்! அதுக்கு நான் எழுதின கமென்ட்: “யம்மா... இவன் நான் அழுவுற மாதிரியே அழுது காட்டி என்னைப் பழிக்கிறான்..!”

நான் என்னவோ சும்மா ஜாலியாதான் எழுதிப் போட்டேன். அட, என்ன ஆச்சரியம்! ரசிக்கும் சீமாட்டியம்மா என் கமென்ட்டை செலக்ட் பண்ணி, ‘கமென்ட் குயின்’கிற அவார்டையும் கொடுத்து கௌரவிச்சுட்டாங்க! நான் எழுதின ஒண்ணு நல்லாருக்குன்னு மத்தவங்களால செலக்ட் ஆனது முதல் முறையா இதுதான்கிறதால, எனக்கு ரெட்டை ஆஸ்கர், ரெட்டை கிராமி விருது கிடைச்ச மாதிரி இருந்துது. மறுபடி ஒருக்கா, ரசிக்கும் சீமாட்டியக்காவுக்கு என் நன்றிகளைச் சொல்லிக்கிறேன்.

அடுத்தபடியா எனக்கு ரொம்பச் சந்தோஷம் தந்த விஷயம், பிரபலமான ‘இட்லிவடை’ பிளாக்ல, நான் என் பதிவுல எழுதியிருந்த நடிகர் விஜய் சம்பந்தமான ஜோக்ஸையெல்லாம் எடுத்துப்போட்டு, என் பிளாகுக்கு லின்க்கும் கொடுத்து என்னைப் பிரபலமாக்கினது. இட்லிவடைக்கு தேங்க்ஸ்!

மூணாவது சந்தோஷம், என் பேர் நல்லா எழுதும் வலைப்பதிவர்கள் லிஸ்ட்ல ‘தினமணி’ பேப்பர்ல வந்தது!

தொடர்ந்து, மன நல மருத்துவர் டாக்டர் ருத்ரன் ஐயா என் பதிவை நேரம் ஒதுக்கிப் படிச்சதோடல்லாம, வேலை மெனக்கிட்டு அதைப் பாராட்டிப் பின்னூட்டமும் இட்டிருக்காரு. இது என் நாலாவது சந்தோஷம்.

இப்ப அஞ்சாவதா ஒரு சந்தோஷம் கிடைச்சிருக்கு. ‘என் டயரி’ பதிவுல ரவிபிரகாஷ் தன்னோட ஒரு புத்தகத்துக்குப் பேர் வைக்கச் சொல்லிக் கேட்டிருந்தாரு. ஏதோ எனக்குத் தோணினதையெல்லாம் எழுதி அனுப்பினேன். சத்தியமா என்னோடதை அவங்க செலக்ட் செய்வாங்கன்ற நம்பிக்கையே எனக்குக் கிடையாது. நான் பிளாக்னு முதல்முதலா படிக்க ஆரம்பிச்சது ரவிபிரகாஷோட ‘உங்கள் ரசிகன்’ மற்றும் ‘என் டயரி’ பிளாக்குகளைத்தான். அதுல முன்னே அவர் தான் விரும்பிப் படிக்கிற பிளாகுகளையெல்லாம் லின்க் கொடுத்திருந்தாரு. அதன் மூலமாதான் லதானந்த் பக்கம், இட்லிவடை, யுவகிருஷ்ணானு மத்த வலைப்பூக்களையெல்லாம் தேடித் தேடிப் படிக்க ஆரம்பிச்சேன். அதனால ஒரு ஆர்வத்துல எனக்குத் தோணின பேர்களையெல்லாம் எழுதினேன். அதுல ஒண்ணை (புதுமொழி 400) செலக்ட் பண்ணிட்டதா இப்ப அறிவிச்சிருக்காரு. அதுக்குப் புத்தகப் பரிசும் அனுப்புறதா சொல்லியிருக்காரு. அதைவிட சந்தோஷம் என்னன்னா, தலைப்பு கொடுத்ததுக்காக அந்தப் புத்தகத்துலேயே எனக்கு நன்றியும் சொல்லியிருக்காராம்.

ம்ஹூம்... மேல எழுத முடியலீங்க. கண்ணுல தண்ணி முட்டுது. நன்றிங்ணா! நன்றிங்கக்கா! என் பதிவைப் படிக்கிற, பாராட்டுற, குட்டு வைக்கிற ‘தமிழ்நதி’யக்கா உள்பட எல்லாருக்கும் நன்றி!
.
Author: கிருபாநந்தினி
•Wednesday, January 27, 2010
ல்லாருக்கும் என் அன்பான குடியரசு தின வாழ்த்துக்களைச் சொல்லிக்கிறேங்க!

சில நாளைக்கு முன்னால, ஆனந்த விகடன்ல யார் யாருக்கெல்லாமோ 25 குறிப்புகள் போடுறாங்க; சிவாஜி பத்திப் போடவே இல்லியேன்னு ஆதங்கப்பட்டு எழுதியிருந்தேன். இந்த வார விகடன்ல போட்டுட்டாங்கய்யா! என் வலைப்பூவை அவங்க படிச்சாங்களோ இல்லியோ, அது எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு, ஏதோ நான் எழுதினதைப் படிச்சுட்டுத்தான் ‘சிவாஜி 25’ போட்டுட்டாய்ங்கன்ற மாதிரி ஒரு ஃபீலிங்!

ஆர்வமா படிச்சுப் பார்த்தேன். என் ஆர்வம் மொத்தமும் புஸ்ஸுனு போயிருச்சுங்கய்யா. ‘சிவாஜி’ பட்டம் கொடுத்தது பெரியார்தான், எம்.ஜி.ஆரும் சிவாஜியும் சேர்ந்து நடிச்ச ஒரே படம் கூண்டுக்கிளி, பெருமாள்தான் சிவாஜியை அறிமுகம் செய்தாரு, கூட்டுக் குடும்பமா வாழ்ந்தாரு, காமராஜர் மேல பக்தி கொண்டவருன்னு ஆண்டாண்டு காலமா படிச்சு, அலுத்து, சலிச்சு, உளுத்துப் போன குறிப்புகளா, கடனேன்னு போட்டு ரொப்பியிருந்தாங்க. ஏங்க, தெரியாமதான் கேக்கறேன்; கலைத் தாயின் தவப் புதல்வனான சிவாஜிக்குப் பெருமை சேர்க்கிற விதமா, சுவாரஸ்யமான ஒரு 25 குறிப்புகளை உங்களால தேத்த முடியலையா? சரி விடுங்க, இவ்ளோ நாள் கழிச்சு இத்தயாச்சும் போட்டாங்களேன்னு மனசைத் தேத்திக்க வேண்டியதுதான்!

த்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட முழுப் பக்க பத்திரிகை விளம்பரத்துல, பாகிஸ்தான் விமானப் படை முன்னாள் தளபதி தன்வீர் முகமது படமும் இருக்குதாம். அதுதான் இப்போ பெரிய சர்ச்சையாம். பேப்பர்ல போட்டிருக்காங்க.

“உங்க அம்மா பிறக்க அனுமதிக்கப்படாம இருந்தா, நீங்கெல்லாம் எங்கே இருப்பீங்க?”ன்னு ஒரு கேள்வியோடு அந்த விளம்பரம் வந்திருக்குது. இந்தக் கேள்வியை அந்த விளம்பரம் யார் யாரைப் பார்த்துக் கேட்குது தெரியுமா... நம்ம பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, கிரிக்கெட் வீரர் கபில்தேவ், சேவாக், பிரபல சரோட் வாத்தியக் கலைஞர் அம்ஜத் அலிகான் இவங்களைப் பார்த்து! இந்தப் படங்கள் வரிசையிலதான் பாகிஸ்தான் ஆளும் எப்படியோ நுழைஞ்சுட்டாப்ல!

அவர் படம் இந்த விளம்பரத்துல எப்படி இடம்பெறலாம்கிற சர்ச்சை ஒரு பக்கம் இருக்கட்டும்; இந்த விளம்பரம் என்ன, நாகரிகமாகவா இருக்கு?

“உங்கள் தாய் பிறக்க அனுமதிக்கப்படாமல் இருந்தால்...”னா என்ன அர்த்தம்? அதாவது, “உங்க அம்மாவைக் கருவிலேயே அழிச்சிருந்தா, நீங்க எல்லாம் எங்கே இருப்பீங்க?”ன்னு கேக்குறாங்க. இது யாரைப் பார்த்துக் கேக்க வேண்டிய கேள்வி? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க மக்கா..! யார் யாரெல்லாம் பெண் குழந்தையை வேணாம்னு ஒதுக்குறாங்களோ, யார் யாரெல்லாம் பெண் சிசுக் கொலையை ஆதரிக்கிறாங்களோ, யார் யாரெல்லாம் பெண் சிசுக் கொலை பண்றாங்களோ அவங்களைப் பார்த்தல்லவா இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கணும்? மன்மோகன் சிங் மாதிரி மதிப்புக்குரியவங்களைப் பார்த்தா கேக்குறது?

புரியலையா? விளக்கமாவே சொல்றேன். தன் பெண்டாட்டி வயித்துல வளர்றது பெண் சிசுன்னு தெரிஞ்சுக்கிட்ட ஒருத்தன், அதை உடனே கலைக்கச் சொல்லி அவளை டார்ச்சர் பண்றான்னு வெச்சுக்குவோம்; அப்ப அவன் பெண்டாட்டியோ அவளைச் சேர்ந்தவங்களோ அவனை, “ஏண்டா நாயே! உங்க அம்மாவைக் கருவுலேயே அழிச்சிருந்தா, நீ எங்கேடா இருப்பே?”னு அவனைக் கேக்கலாம். சரியா?

அப்படின்னா, இந்த விளம்பரம் வேறெப்படி வந்திருக்கலாம்? மதிப்புக்குரிய பெரியவங்க படத்தைப் போட்டு, ‘இவர்கள் அம்மாக்கள் பிறக்க அனுமதிக்கப்படாதிருந்தால், இத்தகைய மாமனிதர்கள் நமக்குக் கிடைத்திருப்பார்களா?’னு கேட்டிருந்தா, அதுல ஒரு அர்த்தம் இருக்கு.

ஹூம்.. இங்கிதமில்லாத விளம்பரம்; அதுல வெட்டித்தனமான ஒரு சர்ச்சை! ஹையோ, ஹையோ!
‘பாய்ஸ்’ படத்தை நேத்து குடியரசு தின சிறப்புப் படமா ‘கலைஞர் தொலைக்காட்சி’யில் பார்த்தேன். ‘என்னது... பாய்ஸா?!’ன்னு குழம்பாதீங்க. ‘பசங்க’ளைத்தான் அப்படி இங்கிலீஷ்ல சொன்னேன்.

இந்தப் படம் ரிலீசானப்பவே, அற்புதமான படம்கிறாங்களே, அவசியம் போய்ப் பார்க்கணும்னு நெனைச்சுக்கிட்டிருந்தேன். முடியாம போச்சு!

சரி, மேட்டருக்கு வரேன். நெஜம்மாவே சூப்பர் படம்தான். பாண்டிராஜுக்கு இதுதான் முதல் படம்னு நினைக்கிறேன். ஆனா, படம் பார்க்குறப்போ அப்படித் தெரியலை. ஒவ்வொரு சீனும், சும்மா சொல்லக்கூடாது... அசத்திட்டாரு! பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் மொக்கைப் படங்கள் கொடுத்திட்டிருக்கிறப்போ, ஸ்டார் வேல்யூ, பன்ச் டயலாக், குத்துப்பாட்டெல்லாம் இல்லாம, ஆரம்பத்துலேர்ந்து கடைசி வரைக்கும் இன்ச் பை இன்ச்சா பார்த்து ரசிக்கும்படியா ஒரு படத்தைத் தந்திருக்கிறது கண்டிப்பா பாராட்ட வேண்டிய விஷயம்தான்.

அப்பாவியா ஒரு இளைஞன், வெகுளியா ஒரு பொண்ணு - இவங்களோட காதல், ஆபாசமான காட்சிகள் எதுவும் இல்லாம, அவ்ளோ ரம்மியமா இருக்கு.

தடக் தடக்குனு எல்லாரும் நல்லவங்களா திருந்திடறது, காலமெல்லாம் சண்டை போட்டுக்கிட்டிருந்த கணவன் மனைவி சடக்குனு ராசியாயிடறது, க்ளைமாக்ஸ்ல பையன் பிழைப்பானா, சாவானான்னு கெடக்குறப்போ கும்பலா திரண்டு வந்து பாட்டுப் பாடுறதுன்னு இந்தப் படத்துக்கு ஒட்டாத காட்சிகளும் இருக்கு. சரி, 100 சதவிகிதம் ஒரு படத்தை ஒரு குறையுமே இல்லாம கொடுத்துட முடியுமா என்ன?

பாண்டிராஜுக்கு என்னோட வாழ்த்துக்களைச் சொல்லிக்கிறேன். இந்தப் படத்தைத் தியேட்டர்ல போய்ப் பார்க்காம விட்டுட்டேனேன்னு இப்ப வருத்தப்படுறேன்.

‘பசங்க’ படத்துக்காக, சிறந்த குழந்தைகள் பட இயக்குநருக்கான தங்க யானை விருது பாண்டிராஜுக்குக் கிடைச்சிருக்காம்.

விருது கொடுத்துக் கேலி பண்றதுங்கிறது இதுதான்!

பசங்களை வெச்சுப் படமெடுத்தா அது குழந்தைகள் படமா? அடங் கொங்காங்கோ! விருது கொடுத்த பெரிய மனுஷங்களா, ‘பசங்க’ படம் குழந்தைகள் படம் இல்லீங்கய்யா! பெரியவங்களுக்கான படம். பெரியவங்க எப்படி நடந்துக்கணும்னு சொல்ற படம். இது கூடப் புரியாம, பாண்டிராஜுக்குச் சிறந்த குழந்தைகள் பட இயக்குநர்ங்கிற விருதைக் கொடுத்துக் கவுத்திட்டீங்களேய்யா!

இது எப்படியிருக்குன்னா... ஒரு ஜோக் சொல்றேன்.

“நம்ம கட்சியோட கொள்கைகளை விவரிச்சுப் பேசினதை ஒளிபரப்பினதுக்காகவா நம்ம தலைவர் அந்த சேனல் மேல கடுப்புல இருக்காரு?”

“ஆமாம்! ‘சிரிப்பொலி’ சேனல்ல சிறந்த நகைச்சுவைக் காட்சின்னு ஒளிபரப்பினாங்களாம்!”

...அப்படியிருக்கு!

ஞாபகம் இருக்கா, ‘தாரே ஜமீன் பர்’ படத்துல நடிச்ச அந்தக் குட்டிப் பையன் தர்ஷீல் தனக்குச் சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது கொடுத்தா வாங்க மாட்டேன்னு அடம் புடிச்சு, சிறந்த கதாநாயகனுக்கான விருதை வாங்கிக்கிட்டது?